Sunday, September 29, 2013

கோயபல்ஸ் பிரச்சாரத்திலும் மோடிக்கு முதலிடம்
- எம்.கண்ணன்

திருச்சியில் நடைபெற்ற பாஜகவின் கூட்டத்தில் நரேந்திர மோடி, தனது “ மோசடி’’ வித்தையை காட்டினார். இதில் நிதானத்தை இழந்த பல தமிழக தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் மோடியை வானளாவ புகழ்ந்து புளகாங்காகிதம் அடைந்து வருகின்றன.
எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் பத்திரிககைகள் தனது அறிவுக்கண்ணை மூடிக்கொண்டு, மோடி வித்தையில் மூழ்கி விட்டனவோ என்னவோ? மோடி பேசும் போது அவர் காட்டிய ஆவேசத்தில், அவரது ஆடையின் ஒரு பகுதி அவிழ்ந்து தொங்குவதைக் கூட பாவம் மறந்தே போனார். தன்னை அமெரிக்கா கண்காணிக்கிறது என்று அறிந்த பிரேசில் நாடு, அமெரிக்க பிரதிநிதிகள் குழுவை தனது நாட்டிற்கு அனுமதிக்கமாட்டேன் என அறிவித்தது. இதுதான் நாட்டுப்பற்று என்கிறார் மோடி. மிகவும் சரிதான்.
ஆனால் அங்கே ஆள்வது இடதுசாரி அரசாங்கம் என்பதை சொல்ல மறந்துவிட்டார்.பிரேசிலை உளவு பார்க்கும் அதே வரிசையில், இந்தியாவையும் உளவு பார்த்து வந்ததே அமெரிக்கா! அதுவும் ஓரே மாதத்தில் 1350 கோடி தகவல்களை திருடியுள்ளதே! அரசியல் விவகாரம், அணு சக்தி திட்டங்கள், விண்வெளி ஆராய்ச்சி, வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் திருடியுள்ளதே! அதற்கு பாஜக என்ன செய்தது.
மோடி கொடி பிடித்து அமெரிக்காவிற்கு எதிராக போராடி னாரா? அப்படிப்பட்ட அமெரிக்காவில் இருந்து வரும் வால் மார்ட்டை விடமாட்டோம் என எதிர்த்து சூலாயுதத்தோடு நடு ரோட்டில் நின்றாரா? இல்லையே. இந்தியாவை எடுபிடியாக்க நினைக்கும் அமெரிக்காவிற்கு நான் ஒரே ஒரு முறை மட்டும் வருகிறேன். என்னை அனுமதி யுங்கள் என மனு போட்டு, காவடி தூக்கியபடி காத்துக் கொண்டிருப்பது யார்? அது மோடிதானே !! சரி போகட்டும். சுதேசி பற்றி வாய்கிழியப் பேசும் மோடி, தன்னை நல்லவர், வல்லவர் என புகழ்பாட பிடித்திருக்கும் விளம்பர நிறுவனம் எது? அமெரிக்காவில் உள்ள “ஆப்போ வேர்ல்ட் வைட்’’ தானே! அதுவும் மாதம் 12 லட்சம் சம்பளம்.
பாவம் அந்த நிறுவனம் “வாங்குற காசுக்கு மேல கூவியதால்’’ அதுவும் வெளியே தெரிந்துவிட்டது. அழியும் சிறுதொழில்களை பற்றி முதலைக் கண்ணீர் விட்ட மோடி. இதற்கெல்லாம் காங்கிரஸ் மட்டுமே காரணம் என்பது போல் சொல்லி பாஜகவை காப்பாற்ற ஒப்பாரி வைத்திருக்கிறார். 500 கோடி கடன் வாங்கி கட்டாத முதலாளிகளின் விளம்பரத்தை வங்கிகள் வெளியிடுவதில்லை.
சிறுதொழில் நிறுவனங்கள் ஒரு லட்சம் கட்டவில்லை என்றால் விளம்பரம் வெளியிடுகின்றன. காங்கிரஸ் 50, 75 என இருக்கிற பெருமுதலாளிகளை மகிழ்விக்க, மேலும் உதவி செய்யும் வேலையை செய்து வருகிறது என மோடி குற்றம்சாட்டியுள்ளார். சரிதான். ஆனால் குஜராத்தில் தான் செய்து வருவதை மறந்துவிட்டார் போலும், குஜராத்தில் 2900 கோடி முதலீடு செய்த டாடா நிறுவனத் திற்கு, 100 ரூபாய்க்கு வருடத்திற்கு 10 பைசா என்ற வட்டி விகிதத் தில் 9,570 கோடியை தூக்கி கொடுத்தது எப்படி? அந்த நிறுவனத் திற்கு 20 ஆண்டுகளுக்கு வாட்வரி கட்டத் தேவையில்லை.
சுங்க வரி, கலால் வரி, சேவை வரி, விற்பனை வரி, மின்சார வரி ஆகிய வற்றில் சலுகைகளை வாரி வழங்கியது ஏன்? 10 ஆண்டுகளுக்கு கார்ப்பரேட் வரியே.... கட்ட வேணாம் என டாடா முன் முட்டிக்கால் போடுவது ஏன்? விவசாய பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான 1,100 ஏக்கரை, சதுர மீட்டர் 10 ஆயிரம் என சந்தை மதிப்பு இருக்கை யில், டாடாவிற்கு ஏன் வெறும் ரூ.900க்கு கொடுக்க வேண்டும்? டாடாவிற்காக 2 ஜி புகழ் நீராராடியாவுடன் நடந்த பேரம்தான் என்ன என்பதையும் சொல்லியிருக்கலாம்.
குஜராத் அரசு சட்ட விரோதமாக கார்ப்பரேட்களுக்கு வழங்கிய சலுகை ரூ.17 ஆயிரம் கோடி என தணிக்கை துறை சுட்டிக் காட்டியிருக்கிறது. கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவகம் செய்வதில் யார் முத லிடத்தை பிடிப்பது என்னும் போட்டியில் காங்கிரசும், பாஜகவும் தானே முதலிடம்.
அதை மோடி சொல்ல மறந்தது ஏனோ? 67.7 சதவிகிதம் குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட் டிருப்பதில் குஜராத் முதலிடம்தான். ஏழ்மையை பயன்படுத்தி ஏழை பெண்களின் கருவறையை, வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விட்டு’’ வாடகைத் தாய்மார்களின் எண்ணிக்கையில் குஜராத் முதலிடம்தான்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5லட்சம் ஏக்கரை தாரை வார்த்ததில் குஜராத் முதலிடம்தான். சுகாதாரத்திற்கு 0.77 சதவிகிதம் என்ற அளவில் குறைந்த நிதி ஒதுக்கும் ஓரே மாநிலம் குஜராத்தான். சுற்றுசூழல் சீர்கேட்டில் குஜராத்தின் வாபிநகரம் முதலிடம்தான். 69 சதவிகித ரேசன் பொருட்களை கடத்தி விற்பதில் குஜராத் முதலிடம்தான்.
மோடியிடம் ஒன்று எதுவென்று கேட்டால் 12 என்பார் காரணம், ரகுராம் ராஜன் குழு அறிக்கையின் படி இந்தியாவின் மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி பட்டியலில் தற்போது குஜராத் 12வது இடத்தில் இருக்கிறது. ஆனாலும் வளர்ச்சியில் நாங்கள்தான் முதலிடம் என்கிறார் மோடி.
ஆமாம் வளர்ச்சி மட்டுமல்ல கோயபல்ஸ் பொய்ப் பிரச்சாரத்திலும் மோடிதான் முதலிடம் என்பதை மறந்துவிட்டார் போலும். ஒரே நாட்டில் எப்படி ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் தனி அந்தஸ்து? ஒரு நாட்டில் இரண்டு சட்டமா? அதே போல் மொழி வாரி மாநிலமாக பிரித்து நாட்டை பிரிவினைக்கு காங்கிரஸ் உட்படுத்தியிருக்கிறது. எல்லாம் அகற்றப்பட்டு ஒரே இந்துதேசியம் மலர வேண்டும் என மனக்கோட்டை கனவை, மலை கோட்டை மாநகரில் அவிழ்த்துவிட்டிருக்கிறார் மோடி.
ஆமாம், மோடி கொள்கை படி, அவரவருக்குரிய தனித்த பண்பாடு கூடாது, மொழிவாரி மாநிலம் கூடாது. குஜராத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ளது போன்று தலித் அதிகாரிகள், ஊழியர்களுக்கு என்று தனியாக அடுக்குமாடி குடியிருப்புக்களை கட்டி தனிமைப்படுத்திட வேண்டும். வர்ணாசிரம முறைப்படியான ஆட்சியே, இந்துராஷ்டிரத்தின் ஆட்சிமுறை என்பதை பெரியார் பிறந்த மண் என்பதால் தெரிந்தே சொல்லாமல் மறைத்திருக்கலாம்.
மோடி தனது பேச்சை துவங்கும் போது, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் “தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு ” சுட்டிக்காட்டினார். அதே ராமலிங்கம் பிள்ளை மோடியை நோக்கி கேட்டிருக்கும் கேள்விகளை மறந்திருக்கலாம். அதனை நாம் ஞாபகப்படுத்துவோம்.
நாய் குரங்கு பூனையை நத்தி முத்த மிடுகிறோம், நரகல் உண்ணும் பன்றியும் நம்மைத் தீண்ட ஒப்புவோம், ஆயும் ஆறு அறிவுடை ஆன்ம ஞான மனிதனை, அருகிலே வரப் பொறாமை அறிவிலே பொருந்துமோ? என கேட்டவர் ராமலிங்கம் பிள்ளை. புத்தரையும், கர்த்தரையும், நபிகள் என்னும் நாயகரையும், கற்றும், கேட்டும் அறிந்திட்டோம், அப்படி யொரு உத்தமரை மகாத்மாவின் வடிவிலே கண்டுவிட்டோம் என்று பெருமை கொண்டாடியவர் ராமலிங்கம்பிள்ளை.
அந்த காந்தியடி களையே சுட்டுக்கொன்ற கோட்சேயின் வாரிசான மோடியை தரம் பிரித்துப் பார்க்கும், தனித்த குணமுண்டு தமிழர்களுக்கு என்பதை வரலாறு சொல்லும்

No comments:

Post a Comment