Wednesday, September 18, 2013

தோழர் பசவபுன்னையாவின் மனைவி : தோழர் ஜெகதாம்பா மறைவு



பேரக்குழந்தைகளுடன் தோழர்கள் ஜெகதாம்பா - எம்.பசவபுன்னையா(கோப்பு படம்)
ஐதராபாத், செப். 18 -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான எம்.பசவபுன்னையா வின் மனைவி தோழர் ஜெகதாம்பா ஐதராபாத்தில் செவ்வாயன்று கால மானார். அவருக்கு வயது (94). தோழர் பசவபுன்னையா - ஜெகதாம்பா தம்பதியின் ஒரே மகனான தோழர் டாக்டர் ஜஸ்வந்த் ஏற்கனவே காலமாகிவிட்டார்.தோழர் ஜெகதாம்பா ஒரு உறுதிமிக்க கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்தவர்.
இளம்வயதிலேயே சமூக - அரசியல் பிரச்சனை களில் ஆர்வத்துடன் பங்கேற்று செயல்பட்ட தோழர் ஜெகதாம் பாவை, அவரது சகோதரரான எல்.பி. கங்காதரராவ் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அறிமுகப்படுத்தினார்.தோழர் எல்.பி.கங்காதரராவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக பிற்காலத்தில் செயல்பட்ட மாபெரும் தலைவராவார்.
1943ல் விஜயவாடாவில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பெண் ஊழியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்ற தோழர் ஜெகதாம்பா, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்கள் பி.சுந்தரய்யா மற்றும் சி.எச்.ராஜேஷ்வரராவ் ஆகியோர் எடுத்த கம்யூனிஸ்ட் தத்துவம் தொடர்பான வகுப்புகளால் ஈர்க்கப்பட்டார். வரலாற்றுப் புகழ்பெற்ற தெலுங்கானா ஆயுதப்புரட்சியில் தலைவர் களிடையே தகவல்களைப் பரிமாறும் ‘கூரியராக’ ஜெகதாம்பா செயல்பட்டார்.
சென்னையிலிருந்து ஒரு சாதாரணப் பெண்ணாக ரயில்களில் ஆயுதங்களைக் கொண்டு சென்று தெலுங்கானா புரட்சியாளர்களுக்கு சப்ளை செய்யும் பணியையும் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர் மேற்கொண்டார். அந்த சமயங்களில் தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மராத்தி என பல மொழிகளிலும் பேசி பிரிட்டிஷ் போலீசாரிடமிருந்து மிக எளிதாக தப்பித்தும் வந்தார்.
தனது வாழ்நாள் முழுவதையும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக அர்ப்பணித்த தோழர் ஜெகதாம்பா, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவராக வலம்வந்த தோழர் பசவபுன்னையாவின் வாழ்க்கைத் துணையாக கட்சிப்பணிகளுக்கு ஊக்கமளித்தார்.ஐதராபாத்தில் தனது பேரக் குழந்தைகளின் பராமரிப்பில் வசித்துவந்த தோழர் ஜெகதாம்பா மறைந்த செய்தி அறிந்து கட்சியின் மாநிலச் செயலாளர் பி.வி.ராகவலு அவரது இல்லத்திற்கு விரைந்தார்.
கட்சியின் தலைவர்கள் மற்றும் தோழர்களின் அஞ்சலிக்குப் பிறகு ஜெகதாம்பாவின் உடல் ஐதராபாத் பஞ்சகட்டா மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லு சுவராஜ்யம், பட்டூரு ராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஜெகதாம்பாவின் மறைவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சியின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.(ஐஎன்என்)
                                               ************************
    தோழர் ஜெகதாம்பா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.ஒரு மறக்க முடியாத நினைவலை.தஞ்சையில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள தோழர் பசவபுன்னைய்யா தோழர் ஜெகதாம்பாலுடன் வந்திருந்தார்.இருவருக்குமே உடல் நலம் சரியில்லை.இருந்தாலும் மாநாட்டில் கலந்துகொள்ள புறப்பட்டபோது,தோழர் எம்.பி,அவர்களை கவனித்து வந்த என்னையும் தோழர் கே.ரமேசையும் அழைத்து என் மனைவியும் கட்சி உறுப்பினர்தான் என அவரது கட்சி உறுப்பினர் அட்டையை காண்பித்து அவரையும் மாநாட்டு மண்டபத்தில் அனுமதிப்பீர்களா? எனக்கேட்டார். அவருக்கு உடல் நலம் சரியில்லை என்னுடனேயே இருக்க விரும்புகிறார் எனக்கேட்டார்.நானும் ரமேசும் ஒரு அரசியல் தலைமைக்குழு தோழரின் இந்தக்கட்டுப்பாட்டை பார்த்து நெகிழ்ந்துவிட்டோம்.பின்பு வரவேற்பு குழுவிடம் முறைப்படி தகவல் தெரிவித்து அழைத்துச்சென்றோம்.இருவருமே மிகவும் எளிமை.காலையில் ஆளுக்கு ஒரு இட்லி மற்றும் ஒரு தோசையில் பாதி,பாதி,வேறு எதுவும் கிடையாது.எங்களிடம்  இருவருமே தஞ்சை பெரியகோவிலிலையும் அதன் கட்டட நுணுக்கத்தையும் காணவேண்டும் என்றனர்.அழைத்துச்சென்றோம்.பொறுமையாக சுற்றிப்பார்த்தனர்.ஆனால் சுவாமியை மட்டும் தரிசிக்கவில்லை.
                                                                        சோ.சுத்தானந்தம்.

No comments:

Post a Comment