Wednesday, September 11, 2013

தனியார் பொதுக்காப்பீட்டு நிறுவனத்தின் தில்லுமுல்லு
பல ஆயிரம் கோடி மக்கள் பணம் சுருட்டல்!!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் காப்பீட்டு நிறுவனமான ‘ஐசிஐசிஐ லம்பார்டு’ மூலம் செயல்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டங்களில் போலியான பயனாளிகளை இணைத்து கோடிக்கணக்கான ரூபாய்களை சுருட்டி வந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்திய அரசினுடைய மக்கள் நலத்திட்டங்களான ராஜீவ்காந்தி சில்பி சுவஸ்திய பீமா யோஜனா ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஆர்எஸ்பிஒய் மற்றும் டபிள்யுபிசிஐஎஸ் போன்ற திட்டங்களை ஐசிஐசிஐ லம்பார்டு காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்த முறையில் அரசு அமல்படுத்த ஏலமுறையின் மூலம் முடிவு செய்தது. இந்த காப்பீட்டுத் திட்டத்தில் 75-90 சதவீத காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு செலுத்திவிடும். மீதமுள்ள தொகையை பயனாளியோ அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசோ செலுத்திவிடும் என்பது நடைமுறை. உண்மையான பயனாளிகளை அடையாளம் கண்டு தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு ஐசிஐசிஐ லம்பார்டு காப்பீட்டு நிறுத்தினத்தின் கடமையாகும்.
அப்படி தெரிவு செய்யப்படுகிறவர்கள் அரசினால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். ஐசிஐசிஐ லம்பார்டு காப்பீட்டு நிறுவனத்திற்கு குறைந்தபட்ச பயனாளிகளை அடையாளம் காண்பதற்கு வருட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை பூர்த்தி செய்வதன் அடிப்படையில்தான் அடுத்த ஆண்டிற்கான காப்பீட்டு ஒப்பந்தம் ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கான தகுதி நிர்ணயிக்கப்படும் என்ற முடிவும் அறிவிக்கப்பட்டது.2011ம் வருடம், பயனாளிகளைத் தெரிவு செய்ய வேண்டிய இலக்கை எட்டாத நிலையில் ஐசிஐசிஐ லம்பார்டு காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளை தெரிவு செய்ததாக போலியாக கணக்கு காட்டி அரசிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் காப்பீட்டுத் தொகையை கபளீகரம் செய்தது.இதுகுறித்து இன்னும் ஆழமாக விசாரிக்கும் போது, வருடக்கணக்காக அரசிற்கு ஏழை பயனாளிகள் தெரிவு சம்பந்தமாக தவறான தகவல்களையே இந்நிறுவனம் தந்துள்ளது.
பருவ நிலை சார்ந்த விவசாய காப்பீட்டுத் திட்டம் WBCIS சம்பந்தமான போலி பயனாளிகளை உருவாக்கி, பல்வேறு திசை திருப்புகின்ற கடிதங்களை அரசிற்கு அளித்துள்ளது. தவறு செய்ததாக குற்றம் சாட்டப்படும் முகவர்கள் மீது ஒருபோதும் நடவடிக்கை எடுத்ததில்லை.2011 ம் ஆண்டு ராஜீவ்காந்தி சில்பி திட்டம் ராஜஸ்தானில் 4 வது வருடமாகஅமலாக்கப்பட்டபோது (2009-10),போலி பயனாளிகளை கணக்கு காட்டியது சம்பந்தமாக புகார்ஒன்று பெறப்பட்டது. பல்வேறு நிறுவன கணக்குகள் போலியாக மாற்றப்பட்டு திருத்தப்பட்டுள்ளன. இந்த கணக்குகள் ஜவுளி அமைச்சகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த போலியான கணக்குகள் மூலம் அரசிடமிருந்து கோடிக்கணக்கில் காப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஜவுளி அமைச்சகம் போலி பயனாளிகள் ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டுபிடித்து 11,000 போலி பயனாளிகளுக்காக பெறப்பட்ட காப்பீட்டுத் தொகையை 10 சதவீத வட்டியுடன் திரும்பச் செலுத்துமாறு ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்திற்கு தாக்கீது அனுப்பியது. ஆனாலும் இருதரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு லம்பார்டு நிறுவனத்தை தடை செய்யலாம் என்ற முடிவை ஜவுளி அமைச்சகம் அமல்படுத்தவில்லை.பருவ நிலை சார்ந்த விவசாய காப்பீட்டுத் திட்டம் மத்திய - மாநில அரசுகளின் நிதியால் நடத்தப்படுகின்ற திட்டம். இத்திட்டத்தின்படி பயனாளிகள், வறட்சி, வெள்ளம், தொடர்மழை மற்றும் தட்பவெப்பம் காரணமாக அவர்களுடைய விவசாயம் பாதிக்கப்பட்டால் உடனடியாக இழப்பீடு பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். தட்பவெப்பநிலை கண்காணிப்பு அலுவலகம் அவ்வப்போது தட்பவெப்பநிலை மாற்றம் சம்பந்தமான தகவல்களை அரசிற்கும், காப்பீட்டு நிறுவனத்திற்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தி தகுதியுள்ள பயனாளிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனம் இராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் 3158 பயனாளிகளை கணக்கு காட்டியிருந்தபோதும், ஒருவருக்குக் கூட காப்பீட்டு இழப்பீட்டை வழங்க முன்வரவில்லை.
மாநில அரசு அறிவுறுத்தியும் கூட அந்நிறுவனம் செவிசாய்க்கவில்லை.இது தொடர்பாக புகார்கள் குவிந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. உண்மையான பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு மாறாக போலியாக குறிப்பிடப்பட்ட பயனாளிகளுக்கு ரூபாய் 13 கோடி அளவிற்கு இழப்பீடு வழங்கியதாக கணக்கு காண்பித்து விசாரணையில் இருந்து தப்பிக்க மேற்படி நிறுவனம் முயன்றது. ராஜஸ்தான் மாநிலஅரசு கடந்த சம்பா மற்றும் குறுவை காலங்களில் ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்திற்கு வழங்கிய காப்பீட்டு பிரிமீயத் தொகை ரூ.85 கோடியாகும். சிபிஐ இது சம்பந்தமாக ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை முறையான குற்றச்சாட்டை பதிவு செய்யவில்லை.
அதேபோல் விவசாயிகளுக்கு மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் காப்பீட்டுத் திட்டத்தில் நஷ்டம் என்று காரணத்தை சொல்லி உண்மையான பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் விவசாயிகளின் மனுக்களை அற்பக் காரணங்களை கூறி தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் தலையீட்டின் அடிப்படையில் ஒருசில பயனாளிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் பெருவாரியான பயனாளிகளுக்கு இழப்பீடு வழங்காத நிலைமை தொடர்கிறது.ரூபாய் 22 கோடி இழப்பீடு கேட்டு மகாராஷ்டிரா அரசு ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்தின் மீது நுகர்வோர் அமைப்பில் வழக்கு தொடுத்தது. வழக்கின் அடிப்படையில் தேசிய உபயோகிப்பாளர் அமைப்பு உடனடியாக 800 இழப்பீடுகளை வழங்குமாறு (ரூபாய் 8 கோடி அளவில்) ஆணை பிறப்பித்தது.
ஆனால் இதுவரை இந்த ஆணையையும் செயல்படுத்த ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனம் தயாராக இல்லை.மகாராஷ்டிரா அரசு இந்த விஷயத்தை காப்பீட்டு வளர்ச்சி மற்றும் நெறிப்படுத்தும் ஆணையத்திடம் (ஐஆர்டிஏ) புகார் செய்தது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை.உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள், காப்பீட்டு திட்டத்தில் ரூ.25 கோடி அளவிலான உண்மையான இழப்பீடுகள், லம்பார்டு நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள், செப்டம்பர் 2 அன்று இந்து ஏட்டில் வெளியாகியுள்ளன.
ஐசிஐசிஐ நிறுவனம் குறித்து தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள உண்மைகள், லாப வெறி ஒன்றை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டுள்ள தனியார் நிறுவனங்களின் தகிடுதத்தங்களுக்கு ஒரு நேரடியான எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையல்ல.மத்திய - மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள், பொதுத்துறையில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மூலமாகவே அமல்படுத்தப்படுவதே இதற்கு சரியான தீர்வு!
-பி.இராஜமகேந்திரன்(இணைச் செயலாளர்,
மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்)

No comments:

Post a Comment