Monday, October 7, 2013

காம்ரேட் கியாப்

இருபதாம் நூற்றாண்டில் நடந்த ஏராளமான ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களில் முதன்மையானது வியட்நாமில் நடந்த போராட்டங்களாகும். இங்கு பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக நடந்த போர்களுக்கு ராணுவத்தலைமையேற்ற ஜெனரல் வோ நகுயென் ஜியாப் தனது 102ம் வயதில் அக்டோபர் 4ந்தேதியன்று ஹோ சி மின் நகரில் மருத்துவமனையில் காலமானார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வியட்நாமின் தொலைதூரத்தில் உள்ள டியன் பியன் பு பள்ளத்தாக்கில் நடந்த போரில் பிரான்ஸ் படை படுதோல்வி அடைந்தது. அது அப்பகுதியில் காலனியாதிக்கத்துக்கு முடிவு கட்டியது. 1954ம் ஆண்டில் வியட் மின் படைகளுக்கு இவர் தலைமை தளபதியாக இருந்தார். வியட்நாமை ஆக்கிரமித்திருந்த பிரெஞ்சு படைகளை விரட்டி அடிப்பதற்காக டியன் பியன் பு பள்ளத்தாக்கில் நடந்த மக்கள் யுத்தத்தில் வியட் மின் படைகள் வெற்றி கண்டன. இந்த வெற்றியின் பின்னணியில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி வியட்நாம் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டது.
1956ம் ஆண்டில் ஒன்றுபட்ட வியட்நாமில் தேர்தல் நடைபெறும் வரையிலான ஒரு தற்காலிக நடவடிக்கை என்று வியட்நாம் பிரிவினை ஒப்பந்தத்தில் விவரிக்கப்பட்டிருந்தது இருபதாம் நூற்றாண்டு வியட்நாம் அனுபவத்தில் ஹோ சி மின்னுக்கு அடுத்த முக்கிய இடத்தை கியாப் பெற்றிருந்தார் என்று வியட்நாம் யுத்தத்தை நேரிடையாக பார்த்து செய்தியாக்கிய புலிட்சர் விருது பெற்ற எழுத்தாளர் ஸ்டான்லி கர்னோவ் 2008ம் ஆண்டில் அளித்த தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார். ராணுவ நடவடிக்கைகளை சுயமாக கற்றுக்கொண்ட ஒரு தளபதி அவர் என்று மேலும் அவர் குறிப்பிடுகிறார். அவருடைய போர்த்தலைமையின் மூலமந்திரமே சகிப்புத் தன்மைதான் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். மேற்கத்திய நாடுகளை வெல்லமுடியாது என்று கூறப்பட்டு வந்ததை இந்த வெற்றி முறியடித்தது.ஒன்றுபட்ட வியட்நாம் தேர்தல்கள் நடைபெறவில்லை. மாறாக அமெரிக்க துருப்புகள் நவீன ஆயுதங்களுடன் தென் அமெரிக்காவில் வந்திறங்கின. 1964 முதல் 1975 வரை நடைபெற்ற அமெரிக்க யுத்தத்தின் போதும் இவர்தான் வடக்கு வியட்நாம் படைகளின் தளபதியாக இருந்தார். மற்றுமொரு மேற்கத்திய ஏகாதிபத்திய நாட்டுடன் நடந்த நீண்டநெடிய போராட்டத்திலும் வியட்நாம் பெரும் வெற்றி பெற்றது. எங்கள் மண்ணின் மீது படையெடுத்தவர்களுக்கு கிடைத்த தோல்வியில் இருந்து, ஏராளமான ஆயுதங்களுடனும், வெடிபொருட்களுடனும் வந்து ஆக்கிரமித்துள்ள அமெரிக்க ஏகாதிபத்திய படைகளும் தப்பிக்க முடியாது என்று 1972ம் ஆண்டில் கியாப் எழுதியிருந்தார். வியட்நாம் போரில் ஐந்தரை ஆண்டுகள் போர்க்கைதியாக இருந்தவர். அமெரிக்க செனட்டர் ஜான் மக்கெயின், கியாப் ஒரு மகத்தான ராணுவதந்திரி என்று கியாப் இறந்த செய்தி கேட்டவுடன் தனது டுவிட்டரில் மக்கெயின் பாராட்டியுள்ளார்.
கியாப் பதின்மூன்று வயதிலேயே பிரான்ஸ் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டார். இதனால் இவர் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இவர் கைது செய்யப்பட்டார். இளமையில் இவருடைய தந்தை இவருக்கு தேசபக்தியை ஊட்டியிருந்தார். தேசபக்தி மிக்க இவருடைய தந்தை ஒரு விவசாயி. விடுதலைக்கு பின்னர் ஹனோய் சென்ற இவர் பிரெஞ்சு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டதாரியானார். 1924ம் ஆண்டில் இவர் டான் வியட் புரட்சிக்கட்சியில் சேர்ந்தார். இங்கு இவர் கம்யூனிசத்தைக் கற்றறிந்தார். பின்னர் 1931ம் ஆண்டில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியில் செர்ந்தார். இவர் ஒரு போராளி ஆன நகுயென் தி மின் ஜியாங் என்பவரை மணந்தார். இவருடைய மனைவி பிரெஞ்சு துருப்புகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அங்கு மரணத்தை தழுவினார். பின்னர் கியாப் சீனாவுக்கு சென்றார். அங்கு இவருக்கு ஹோ சி மின்னுடன் தொடர்பு ஏற்பட்டது.வியட்நாம் திரும்பிய இவர் வியட் மின் என்ற கொரில்லா படையை உருவாக்கினார். அதற்கு தலைவராக இருந்து செயல்பட்டார்.அமெரிக்காவுடன் வியட்நாம் நடத்திய மக்கள் யுத்தத்தின் போது இவர் வியட்நாம் படைகளின் தலைமை தளபதியாக இருந்தார்.கம்யூனிஸ்ட் அரசுகள் கொடுத்துதவிய நவீன ஆயுதங்களுடன் வடக்கு வியட்நாம் ராணுவம் ஒரு மரபு ரீதியான ராணுவமாகச் செயல்பட்டது. வியட்நாம் போரில் பல முனைகளில் அமெரிக்கா தோல்வியைத் தழுவியது.
அமெரிக்க மக்களின் போர் எதிர்ப்பும் அமெரிக்காவை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது.சமாதான ஒப்பந்தத்துக்குப் பின் அமெரிக்க படைகள் 1973ல் வியட்நாமை விட்டு வெளியேறின.கியாப் வழிகாட்டலின்படி அன்றைய தென் வியட்நாம் தலைநகர் சைகோனுக்குள் வடக்கு வியட்நாம் படைகள் புகுந்தன.1975 மார்ச் 30 அன்று இருநாடுகளும் இணைந்து ஒன்றுபட்ட வியட்நாம் உருவானது.பாதுகாப்பு அமைச்சராக இருந்த கியாப் துணை பிரதமராக நியமிக்கப்பட்டார்.1980ம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.1982ம் ஆண்டில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவில் இருந்து ஓய்வு பெற்றார். 1991 வரை கட்சியின் மத்தியக்குழுவிலும், துணைபிரதமராகவும் நீடித்தார். ராணுவ நடவடிக்கைகள், தந்திரங்கள் பற்றியும் வியட்நாமில் நடந்த யுத்தங்கள் பற்றியும் இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment