Saturday, March 22, 2014

மக்கள் தலைவர் ஏ.கே.ஜி.
அ.அன்வர் உசேன்

மார்ச் 22 : ஏ.கே.ஜி. நினைவுநாள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனும் புரட்சிகர அமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய நவரத்தினங்களில் ஒருவர் ஏ.கே.ஜி. என அன்புடன் அழைக்கப்படும் தோழர் ஏ.கே. கோபாலன் 1977ல் மறைந்த அந்த மாபெரும் தலைவரின் வாழ்வு ஒவ்வொரு பொதுவுடமை போராளியும் கற்றுணர வேண்டிய அரிய பாடம் ஆகும். விடுதலைப் போரும் சமூக மாற்றத்திற்கான போரும்தோழர் ஏ.கே. ஜி. அக்டோபர் 1ம் தேதி 1904ம் ஆண்டு பிறந்தார். சிறுவயது முதலே சமூகப்பணியில் ஆர் வம் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் பள்ளிஆசிரியராக பணியாற்றினார்.
விடு தலைப்போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த சமயத்தில் தனது பணியை புறக் கணித்துவிட்டு தேசபக்தி இயக்கத்தில் இணைந்தார். விடுதலைக்காக பல சமயங்களில் சிறைவாசம் இருக்க வேண் டிய நிலை ஏற்பட்டது. விடுதலைப் போருடன் இணைந்து சமூகப் போராட்டங் களிலும் ஏ.கே. ஜி கலந்து கொண் டார். தலித் மக்கள் கோவில் நுழைவுப்போராட்டத்திற்கு அவர் “கேப்டனாக” தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் சனா தனிகளால் கடுமையாக தாக்கப்பட்டார். எனினும் இப்போராட்டத்திற்குப் பிறகு கோவில்களும் அதனை நோக்கிய சாலைகளும் அனைவருக்கும் திறக்கப் பட்டன.முதலில் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய ஏ.கே.ஜி. தம்மை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். பின்னர் பொதுவுடமை இயக்கத்தில் இணைந்தார். அவரது வாழ்நாளில் 16 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அதில் 6 ஆண்டுகள் சுதந்திர இந்தியாவில் சிறைவாசம் என்பது குறிப்பிடத்தக்கது.
1941ம் ஆண்டு ஒரு முறை சிறையில் இருந்து தப்பித்து பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங் கினார்.தேசம் சுதந்திரம் அடைந்த பொழுதுஏ.கே.ஜி. கண்ணூர் சிறையில் தனி மைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட கொடுமையும் நடந்தது. தேசம் முழுவவதும் விடுதலையை கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த ஏ.கே. ஜி. சிறையில் வாடிக்கொண்டிருந்தார். காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அந்தப் போராளி மீது அவ்வளவு கோபம் மற்றும் பயம். அந்தச் சூழல் குறித்து ஏ.கே. ஜி அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“கேரளா காங்கிரஸ் கமிட்டியின் செய லாளராகவும் அதன் தலைவராகவும் மற் றும் நீண்ட காலத்திற்கு அகில இந்திய கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்த நான் ஆகஸ்டு 15 அன்று சிறையில் இருக்கிறேன்!”எனினும் அவர் விடுதலையை கொண்டாடாமல் இருக்கவில்லை. ஆகஸ்ட் 15ம் நாள் ஒரு தேசியக்கொடியை கையில் எடுத்துக்கொண்டு சிறை வளாகத்தினுள் முழக்கமிட்டபடி நடந்தார். கைதிகளை ஒன்றிணைத்து கூரையின் மீது தேசியக்கொடியை ஏற்றினார். விடுதலையின் பொருள் என்ன என்று கைதிகளிடையே உரையாற்றினார்.
புரட்சிகர நாடாளுமன்றப் பணிக்கு இலக்கணம்
ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்றத்தில் புரட்சிகரமாகச் செயல்படுவது எப்படி என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் தோழர் ஏ.கே.ஜி. எனில் மிகையாகாது. 1952, 57, 62, 67, 71 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் ஏ.கே. ஜி. அவர்கள் 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதன் மூலம் பல சலுகைகள் கிடைக் கின்றன.வாழ்வின் மேல்தட்டு மக்க ளோடு பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது. வெளிநாட்டு தூதர்கள் மற்றும் பணம்படைத்த பெரிய மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு ஏராளம்! ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சியின் பிரதிநிதி விழிப்புடன் இல்லை யெனில் சறுக்கலுக்கு ஆபத்து மிக அதிகம். அது அழிவின் பாதைக்கு இட்டுச் செல்வதும் திண்ணம்.
இவ்வாறு தடம் புரண்ட முதலாளித்துவ கட்சிகளின் பிரதிநிதிகள் ஏராளம்!எனினும் தொழிலாளி வர்க்கக் கட்சியின் பிரதிநிதிகள் இந்த அழிவுப்பாதையை தேர்ந்தெடுப்பது இல்லை.இதற்கு இலக்கணம் வகுத்த பெருமை தோழர் ஏ.கே. ஜி.யையே சாரும். நீண்ட நெடிய காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந் தாலும் அந்தச் சூழலினால் ஒருபோதும் தோழர் ஏ.கே.ஜி. மயங்கியது கிடையாது. இதற்கு அடிப்படைக்காரணம் தோழர் ஏ.கே.ஜி.க்கு இருந்த உழைக்கும் மக்களின் ஆழமான தொடர்பும் பொது வுடமை இயக்கத்தின் மகத்தான கொள்கைகளும்தான்!தோழர் ஏ.கே. ஜி. உரையாற்றுகிறார் என்றால் ஒட்டு மொத்த நாடாளுமன்றமும் அமைதியுடனும் கவனத்துடனும் அவரது உரையை செவிமடுக்கும். அத்தகைய ஆளுமையை தோழர் ஏ.கே. ஜி. அவர்கள் பெற்றிருந்தார்.1975ல் அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து அவர் ஆற்றிய உரை, இல்லை அவரது கர்ஜனை இந்திய நாடாளுமன்றத்தின் மிகச்சிறந்த உரைகளில் ஒன்று! ஜனநாயகத்தின் மீது பற்றுக் கொண்ட அனைவருக்கும் அவசரகால நிலையை எதிர்த்துப் போராட தோழர் ஏ.கே.ஜி.யின் உரை மிகுந்த நம்பிக்கையை அளித்தது.
ஏ.கே.ஜி.யின் பணி நாடாளுமன்றத் திற்கு வெளியேதான் அதிகமாக இருந்தது.அந்தப் போராட்டங்களை ஆள்வோரின் கவனத்திற்கு கொண்டு வரும் ஒரு மேடையாகவே நாடாளுமன்றத்தை ஏ.கே.ஜி. பயன் படுத்தினார். பஞ்சாப் விவசாயிகள் போராட்டமா? அங்கு தோழர் ஏ.கே. ஜி. இருந்தார். தமிழகத்தில் போராட்டமா? தோழர் ஏ.கே.ஜி. பங்கேற்பு இருந்தது. குஜராத் மொழிவாரி மாநிலப் போராட்டமா? அங்கும் தோழர் ஏ.கே. ஜி. இருந்தார்.தோழர் ஏ.கே.ஜி. இல்லாமல் கேரளாவின் எந்த ஒரு போராட்டமும் நடந்தது இல்லை. ஒரு காலத்தில் தில்லியில் “போராட்டம் என்றால் ஏ.கே.ஜி; ஏ.கே.ஜி.என்றால் போராட்டம்” என பேசும் அளவிற்கு அவரது போராட்ட வாழ்வு இருந்தது.இந்தப் போராட்டங்களின் பிரச்சனைகளை விவாதிக்கவே நாடாளுமன்றத்தை ஏ.கே.ஜி. பெரும்பாலும் பயன்படுத்தினார். நாடாளுமன்றத்திற் குள்ளும் வெளியேயும் போராட்டப் பிரச்ச னைகளை ஒருங்கிணைப்பதில் அவர் மிகத் திறமையாகச் செயல்பட்டார். எனவே தான் புரட்சிகர நாடாளுமன்றப் பணிக்கு இலக்கணம் வகுத்தவர் தோழர் ஏ.கே. ஜி.
தோழர் ஏ.கே.ஜி.யின் பாரம்பரியத்தை கற்போம்
கேரளாவில் பொதுவுடமை இயக்கத்திற்கு அடித்தளம் இட்டு உரமேற்றி யவர்கள் மூவர். அவர்கள் தோழர்கள் கிருஷ்ணப்பிள்ளை, இ. எம். எஸ். நம்பூதிரிபாட் மற்றும் தோழர் ஏ.கே.ஜி. ஆகியோர் தோழர் ஏ.கே.ஜி. மக்களோடு எந்த அளவிற்கு நெருங்கி இருந்தாரோ அந்த அளவிற்கு மார்க்சிய-லெனினியம் மற்றும் சர்வதேசக் கோட்பாடுகளிலும் உறுதியாக இருந்தார். 1977ம் ஆண்டு மறைந்த தோழர் ஏ.கே.ஜி. ஒரு செழுமையான பொது வுடமை பாரம்பரியத்தை விட்டுச் சென் றுள்ளார். அந்த பாரம்பரியத்தை கற்பதும் அதனை அமல்படுத்துவதும் ஒவ்வொரு பொதுவுடமைப் போராளிக்கும் கட்சிப் பணியில் மிகுந்த பலன் தரும் என்பதில் அய்யமில்லை!

No comments:

Post a Comment