ஆம், மதுரையின் வீரத்திருமகள் கே.பி.ஜானகி அம்மாள் அவர்கள் மறைந்த நாள்தான் அது.ஒரு நாடகமேடை கலைஞராக, சுதந்திரப் போராளியாக, காங்கிரஸ் தொண்டராக, கம்யூனிஸ்ட் ஊழியராக, ஒரு பெண்ணியவாதியாக, மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு வீராங்கனையாக வாழ்ந்து மறைந்த கேபிஜே என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கே.பி.ஜானகி அம்மாள் அளித்த பங்களிப்பினை எழுதிச் சுருக்கி விட முடியாது. 12ம் வயதிலேயே தன்னுடைய கணீர்க்குரலால் நாடகமேடைகளில் பிரபலமானவர் இவர். இவருடைய பாடலைக் கேட்பதற்கென்றே அன்றைய நாட்களில் பெரும் கூட்டம் கூடி நிற்கும்.
மதுரை தந்த மாபெரும் நாடகமேடை கலைஞர் விஸ்வநாததாஸ். ஆனால் அவருடன் இணைந்து நடிப்பதற்கு, அவருடைய சாதி காரணமாக பல நடிகைகள் தயங்கி வந்தனர். மனிதர்களில் தாழ்ந்தவரில்லை என்ற கொள்கைப்பிடிப்புடைய ஜானகி அம்மாள் அவருடன் இணைந்து மேடைகளில் நடித்து வந்தார். வெள்ளையருக்கு எதிராக நாடகமேடைகளில் பாடி வந்த ஜானகி அம்மாள் 1930ம் ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த நாடகம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். அதனையடுத்து ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தார். 1917ம் ஆண்டில் பத்மநாபன் - லட்சுமி தம்பதியருக்கு மகளாகப் பிறந்த ஜானகி சிறுவயதில் வறுமையில் வாழ்ந்தார். எட்டு வயதில் தாயார் மறைந்த பின் பாட்டியுடன் வாழ்ந்தார். எட்டாம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறிய ஜானகி இசை வகுப்பில் சேர்ந்தார். பின்னர் அவர் பழனியப்பா பிள்ளை பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து நாடகக் கலைஞரானார். அதே குழுவில் ஹார்மோனியம் வாசித்த குருசாமி நாயுடுவை அவர் மணந்தார். சுதந்திரப் போரிலும், அரசியலிலும் அவர் கவனம் திரும்பிய பின் அவர் நாடகங்களில் ந்டிப்பது குறைந்து விட்டது.
நாடகமேடைகளில் ஈட்டிய பணத்தை மக்களுக்காக செலவழிக்கத் தொடங்கினார். 1936ம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்த இவர் மதுரை காங்கிரஸ் கமிட்டியில் அலுவலகப் பொறுப்பாளரானார். மேடைகளில் தேசியப்பாடல்களைப் பாடி வந்த இவர் மெல்ல மெல்ல சிறந்த மேடைப்பேச்சாளராக வளர்ச்சி பெற்றார். இடதுசாரி எண்ணம் கொண்ட காங்கிரஸ்காரர்கள் தொடங்கிய காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பொதுவுடைமை கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர் 1930ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1967ம் ஆண்டில் மதுரை கிழக்கு தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் கைமுஷ்டியை ஓங்கியபடி தெருக்களில் இறங்கி போராட்டங்களை நடத்தியவர். பஞ்சாலை தொழிலாளிகள், விவசாயிகள், மற்ற தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து வந்தவர்.
அவர்களின் நலனகளுக்காக அவர் நடத்திய போராட்டங்கள் பல. நியாயமான காரணங்களுக்காக நடத்திய போராட்டங்களில் பங்கேற்கும்படி கால்நடையாக நடந்து மக்களைத் திரட்டியவர் அவர் என்றும் இன்றும் கூட துவரிமான், திருமங்கலம், சோழவந்தான் போன்ற கிராமத்தினர் கம்யூனிஸ்ட் கட்சியை ஜானகி அம்மா கட்சி என்று கூறுகிறார்கள் என்று மதுரை கம்யூனிஸ்ட் தலைவர் வீரபத்திரனின் மகளும் மாநகராட்சி உறுப்பினருமான செல்லம் கூறுகிறார். திருச்சி பொன்மலையில் அவருடைய பெண்ணியம் வெளிப்பட்டது. 1974ம் ஆண்டில் பாப்பா உமாநாத்துடன் இணைந்து ஜனநாயக மாதர் சங்கத்தை நிறுவி அதன் முதல் தலைவராகவும் செயலாற்றினார். பெண் சுதந்திரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண் சமத்துவம் போன்றவற்றில் மக்கள் மனதில் புதிய கருத்துக்களை விதைப்பதில் அவருடைய உரைகள் பெரும் பங்கு வகித்தன. அரசியலில் பெண்களை அறிமுகப்படுத்தியதில் அவருடைய பங்கு முக்கியமானது. கட்சியின் செயல்பாட்டில் எங்களைப் போன்ற பலர் பொறுப்புக்கு வந்ததற்கு அம்மாவே காரணம் என்று அவருடைய தோழியும், சீடருமான நாகம்மாள் கூறுகிறார்.
கண்டிப்பும்,கருணையும் நிறைந்தவர் ஜானகி அம்மாள். அவருடைய தாயன்பும், கருணையும் கட்சித்தோழர்களை வேற்றுமைகளை மறந்து செயல்படவைத்தது. அவசரநிலைக்காலத்தில் கட்சி தோழர்களுக்கு உணவளிப்பதற்காக தன்னுடைய நகைகளையும் பட்டுப்புடவைகளையும் விற்று பணம் கொடுத்தவர் அவர். அவருடைய தகட்டு புடவையில் (பட்டுப் புடவையில்) இருந்து சரிகைகளைப் பிரித்து அவற்றை உருக்கி விற்று வயிற்றை நிரப்பினோம் என்று நாகம்மாள் நினைவு கூருகிறார். தன்னுடைய கடைசி நாட்களை மண்டையன் ஆசாரி தெருவில் இருந்த கட்சி அலுவலகத்தில் அவர் கழித்தார். தன்னுடைய வாழ்க்கையில் கிடைத்தவற்றை திருப்தியுடன் ஏற்றுக்கொண்டவர் அவர். பிறருக்கு தன் உடைமைகளை தானமாக அளித்த அவர் பிறரிடம் அன்பளிப்புகளை ஏற்றுக் கொண்டதில்லை.
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட பென்ஷனையும், தாமிரப்பட்டயத்தையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.மக்கள் நலனே தன் நலனாக வாழ்ந்த கே.பி.ஜானகி அம்மாள் 1.3.1992 அன்று கட்சி அலுவலகத்தில் உயிர் நீத்தார். அவர் மறைந்த நாளன்று மதுரை நகரமே தனது உத்தம புதல்விக்காக அழுதது-
இந்து நாளிதழ் மெட்ரோபிளஸ் கட்டுரையை தழுவி எழுதியவர் தாஸ்
No comments:
Post a Comment