Thursday, March 13, 2014

சிபிஎம் ஆந்திர மாநிலக்குழு இரண்டாகப் பிரிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலுங்கானா மாநிலச் செயலாளர் டி.வீரபத்ரம் (இடது) மற்றும் ஆந்திர மாநிலச் செயலாளர் பி.மது(வலது) ஆகியோரை செய்தியாளர்களிடம்அறிமுகப்படுத்தி பேசினார் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு.
ஹைதராபாத், மார்ச் 13 -
ஆந்திர மாநில பிரிவினையைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநிலக்குழு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தெலுங்கானா மாநிலக்குழு செயலாளராக டி.வீரபத்ரம் (தம்மினேனி வீரபத்ரம்), ஆந்திர மாநிலச் செயலாளராக பி.மது(பெனுமல்லி மது) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆந்திர மாநிலத்தை தெலுங்கானா என்றும் சீமாந்திரா என்றும் இரண்டு மாநிலங்களாக பிரிப்பதற்கான ஆந்திரப்பிரதேச மாநில மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தப் பின்னணியை கருத்தில் கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆந்திரப்பிரதேச மாநிலக்குழுவை இரண்டாக பிரித்துள்ளது. கட்சியின் ஆந்திரப்பிரதேச மாநிலக்குழு கூட்டம் கடந்த மார்ச் 8ம்தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., மாநிலச் செயலாளரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பி.வி.ராகவலு, மத்திய செயற்குழு உறுப்பினர் வி.சீனிவாசராவ் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு தெலுங் கானா மாநிலக்குழு என்றும் ஆந்திர மாநிலக்குழு என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டது.தெலுங்கானா மாநிலக்குழுவில் 42 பேர் இடம்பெற்றுள்ளனர்.
ஆந்திர மாநிலக்குழுவில் 44 பேர் இடம்பெற்றுள்ளனர்.இரண்டு மாநிலக்குழுவும் தனித்தனியாக கூடி மாநிலச் செயலாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்தன.தெலுங்கானா மாநிலச் செயலாளராக டி.வீரபத்ரம் தேர்வு செய்யப்பட்டார். மாநில செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.வீரய்யா, எஸ்.மல்லா ரெட்டி , ஜி.நாகையா, சி.எச்.சீத்தாராமுலு மற்றும் சுக்கா ராமுலு ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.
ஆந்திர மாநில செயலாளராக பி.மது தேர்வு செய்யப்பட்டார். மாநில செயற்குழு உறுப்பினர்களாக பி.ராமுலு, எம்.ஏ.கபூர், எஸ்.புண்ணிய வதி, வி.கிருஷ்ணய்யா, ஒய்.வெங்கடேஷ்வரராவ், சி.எச்.நரசிங்க ராவ் மற்றும் மிடியம் பாபு ராவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற செய்தி யாளர்கள் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு இந்த முடிவுகளை அறி வித்து, புதிய மாநில செயலாளர்களை அறிமுகம் செய்தார்.அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ராகவலு, மக்களவைத் தேர்தல் என்பது ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேசத்தில் நடைபெறு கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆறு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும். ஆந்திர சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் 33 தொகுதிகளில் கட்சி போட்டியிடும் என அறி வித்தார். காங்கிரஸ் பாஜகவுக்கு எதிரான எந்தக் கட்சியுடனும் தேர்தல் உடன்பாடு செய்துகொண்டு போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது; அப்படியொரு உடன்பாடு ஏற்பட்டால் கட்சி போட்டியிடும் இடங்கள் குறையக்கூடும்; உடன்பாடு இல்லையென்றால் மேலும் கூடுதலான இடங்களில் கட்சி போட்டியிடும் என்றும் ராகவலு தெரிவித்தார்.

No comments:

Post a Comment