Monday, February 10, 2014

`கேட்டது வாழ்வு; கிடைத்தது சாவு!’
பி.தங்கவேலு
பாரத தேசம் தனது அறுபத்தேழாவது சுதந்திரத் தினத்தையும், அறுபத்தினான் காவது குடியரசு தினத்தையும் கொண்டாடி யுள்ளது. அதோடு பதினைந்தாவது பொதுத் தேர்தலைக் கடந்து, பதினாறாவது பொதுத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது இந்தாண்டில்!பாரத தேசத்தின் பாட்டாளிகளின் உழைப்பு - அன்று இருந்த உள்நாட்டு முதலாளிகளின் சுரண்டலில் இருந்து, இன்று பன்னாட்டு முதலாளிகளின் சுரண் டல் என்கிற `ரேஞ்ச்’க்கு `சுரண்டல்’ பரிணாமம் பெற்றதுதான் பாரதநாடு கண்ட பலன்!இதற்காகவா அன்று சிதம்பரம் செக் கிழுத்தார்? அன்று பகத்சிங் தூக்கு கயிறை முத்தமிட்டார்? சுதந்திரத்திற்கு முன்னும்சரி; பின்னும்சரி அன்று சிறைக்கொட்டடியில் குருதி சிந்திய வீர வரலாறுகள் எத்தனை? எத்தனை? ஆம்! அவற்றில் ஒன்று இதோ...1950பிப்ரவரி 11... இந்திய துணைக் கண்டம் தன்னை குடியரசு நாடாக பிரகடனப்படுத்திய பதினோராவது நாள்; முதல் குடியரசு தினம் கொண்டாடிய ஆண்டு. அதாவது இந்தியாவில் சுதந்திர காற்று வீசத் தொடங்கி ஏறக்குறைய இரண்டரை வருடம் நடைபெறும் சமயம்.
நாடெங்கும் சுதந்திர காற்று வீசிக்கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த சுதந்திர காற்று இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் சுவாசிக்க கிடைக்கவில்லை. என்ன கொடுமை இது பார்த்தீர்களா? ஆம்! 1948-1951 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் தடைவிதிக்கப்பட்டு இருந்தது விடுதலை இந்தியாவில்!விடுதலைக்காக - வெள்ளையனை விரட்டியடித்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை இந்திய மண்ணில் இருந்து அதன் சுவடு கூட தெரியாத அளவுக்கு வேரோடு பிடுங்கி எறிந்த தேசபக்த போரில் கம்யூனிஸ்ட்கள் பங்கு மகத்தானது; அளப்பரியது! அப்படிப்பட்ட தேசபக்தர்கள் மீது விடுதலை இந்தியாவிலும் அடக்குமுறை தொடர்ந்தது.கம்யூனிஸ்ட்கள் மீது வழக்குமேல் வழக்கு; அந்த சதிவழக்கு.... இந்த சதிவழக்கு... என்று வெள்ளையன் பாணியிலேயே பவனி வந்தது பாரத குடியரசாம் பாழாய்போன காங்கிரஸ் பே(ய்)ரரசு! இதன் விளைவு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் கம்யூ னிஸ்ட்களை அடைத்து அகம் மகிழ்ந்தது அன்றைய காங்கிரஸ் காட்டுமிராண்டி அரசு.ஏன்? எதற்காக? `ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர், உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ !” என்று பாரதிதாசன் சொன்னாரே... அந்தசமத்துவ கொள்கையை விடுதலை சமவெளிக ளில் விதைத்தார்கள்; விடுதலை இந்தியாவில் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக செங்கொடியை உயர்த்திப் பிடித்தார்கள்.
அதற்காகத்தான் அன்று கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப் பட்டார்கள்!அப்படித்தான் சேலம் மத்திய சிறை யில் தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த (அன்றைய மதராஸ் ராஜ் ஜியம்) 350க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்கள் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு 6 மாதம் முதல் 20 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர்களில் பெரும்பகுதி 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் யாவரும் அரசியல் கைதிகள்.இவர்களை கொள்ளை, கொலை, திருட்டு போன்ற சமூகவிரோத, சட்ட விரோத காரியங்களை செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த `கிரிமினல்’ கைதி களோடு `சி’ பிரிவிலேயே சிறையில் அடைக் கப்பட்டனர்.- “நாங்கள் சுதந்திர போராளிகள்; எங்களை பிக்பாக்கெட் கைதிகள்போல் நடத்தக்கூடாது; அதை உயிர் போனாலும் ஏற்கமாட்டோம்!” என்று வீரசமர் புரிந்தார்கள் சிறையில் நாடெங்கும் கம்யூனிஸ்ட்கள். இதுதான் சேலம் சிறையிலும் நடந்தது. கம்யூனிஸ்ட்களுக்கு `அரசியல் கைதி’ என்கிற உரிமையைக் கூட வழங்க மறுத்தது அன்றைய காங்கிரஸ் அரசு. `எங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும்’ என்று குரல் கொடுத்த கம்யூனிஸ்ட்களை காக்கை குருவிகளை சுடுவது போல் சுட்டு தனது வர்க்க பாசத்தை காட்டிக் கொண்டது. ஆம்! ஆட்சி மாறினாலும் காட்சி மாறா காங்கிரஸ் அரசு தானே அன்று முதல் இன்றுவரை இருக்கிறது.சேலம் சிறையில் நரவேட்டை நடந்த பொழுது சிறையில் இருந்து மறைந்த உத்தமலிங்கம் கூறுகிறார்- “கிரிமினல் கைதி களைப்போல் தொப்பியும், நம்பர் அட்டையும் அணிய வற்புறுத்தினர்.
ஒவ்வொரு நாளும் வற்புறுத்துதல் அதிகமானது. 1950 பிப்ரவரி 7 ம் நாள் 15 தோழர்களை `அனெக்ஸ்’ பகுதியிலிருந்து தலைமை சிறைக்கு கொண்டு சென்றனர். மாட்டு நுகத்தடியில் பூட்டி நீர் இறைக்க வைத்தனர். இதை கேள்விபட்ட எங்களுக்கு ரத்தம் கொதித்தது. `பிப்ரவரி 11ல் நெம்பர் அட்டை அணிய மறுத்ததால் ஜெயிலர் கிருஷ்ணன் நாயர் கொக்கரித்தான். முதலில் தடியடி நடத்தினர். சேகரித்து வைத்திருந்த கற்களில் நாங்களும் தாக்கினோம். ஜெயிலர் மீது ஒருகல் விழுந்து விட்டது. அவ்வளவுதான். உடனே துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். அப்பொழுது முன்னணி தோழர்கள் எங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, துப்பாக்கி குண்டுகளுக்கு அவர்கள் தங்களின் நெஞ்சை நிமிர்த்தி காட்டினர். என் போன்று இளைஞர்கள்தான் நிறைய தோழர்கள் இருந்தோம்...”17 தோழர்கள் துப்பாக்கிச்சூட்டிலும், 5 தோழர்கள் அடித்தும் கொல்லப்பட்டனர். பிப்ரவரி 11 ல் 22 சுதந்திர போராளிகள் (கம்யூனிஸ்ட்டுகள்) சேலம் சிறையில் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். வீரமரணம் அடைந்தனர். 105 ரவுண்ட் சுட்டுள்ளனர்.
காங்கிரஸ் காட்டுமிராண்டி அரசு கம்யூனிஸ்ட்டுகளின் செங்குருதியை குடித்து தன் வர்க்க பாசத்தை உலகுக்கு பறைச் சாற்றிக் கொண்டது. அந்த வீரதியாகிகள் திருப்பெயர்கள் இதோ-ஆறுமுகம், காவேரி முதலியார், சேக்தாவூத் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கேரளா பகுதி தோழர்கள்.“சுட்டேன் சுட்டேன் குண்டுகள் தீரும்வரை சுட்டேன்“ என்று ஜாலியன் வாலாபாக் பூங்காவில் அன்று பஞ்சாப் சகோதரர்களை சுட்டி குவித்தானே வெள்ளை பரங்கி ஜெனரல் டயர்... அதுபோல் அன்று சேலம் சிறையில் அரங்கேறியதை கேட்டால் நெஞ்சம் வெடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாதல்லவா? ஆம்.. அன்று `விடுதலை’யில் தந்தை பெரியார்- “நினைக்க நினைக்க நெஞ்சம் வெடிக்கிறது” என்றும், `திராவிட நாடு’ ஏட்டில் அறிஞர் அண்ணா “கேட்டது வாழ்வு; கிடைத்தது சாவு” என்று தலையங்கம் எழுதி பொங்கி எழுந்தனர்.சேலம் சிறைத்தியாகிகள் அன்று சிந்திய செங்குருதி வீண்போகவில்லை; அவர்களின் சாம்பல்களில் இருந்து இன்று ஆயிரமாயிரமாய் பீனிக்ஸ் பறவைகள் போல கம்யூனிஸ்ட்டுகள் எழுந்து வருகிறார்கள். ஆம்! சேலம் சிறைத்தியாகிகள் எந்த லட்சியத்திற்காக.. அதாவது `ஒப்பப்பர்’ சமுதாயத்திற்காக தங்களின் இன்னுயிரை ஈந்தார்களோ.. அந்த சோசலிச சமுதாயம் அமைத்திடும் பணி இன்றும் தொடர்கிறது.ஒருபக்கம் பெற்ற சுதந்திரம் பன்னாட்டு கம்பெனிகளின் ஆக்கிரமிப்பால் பறிபோகும் நிலையில் உள்ளது.
இன்னொரு பக்கம் 1990களில் துவக்கப்பட்ட உலக மயம், தாராளமயம், தனியார்மயம் கொள்கையால், இன்று நம்நாடு வெளிநாட்டு, உள்நாட்டு சீமான், சீமாட்டிகளின் வேட்டைக்காடாக மாறிவருகிறது. மேலும் எல்பிஜி கொள்கைகள் அமலாக்கம் விஸ்பரூபம் எடுத்து நம்மை விளிம்பு நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. ஆம்! அணுசக்தி முதல் அடுப்பெரிக்கும் தீக்குச்சி வரை அந்நியர்கள் கையில் அடைக்கலம் ஆகிவருகிறது; அதைத்தான் மன்மோகன்சிங் வகையறாக்கள் சுதி மாறாமல் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.இத்தகைய எல்பிஜி கொள்கைகளுக்கு எதிரான போரும்,இந்திய சுதந்திரத்தை பேணி பாதுகாக்கும் போரும் வேறு வேறு அல்ல! பாரதத்தைக் காக்கும் குருசேத்திரப் போரைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இம்மண்ணில் சேலம் சிறைத்தியாகிகள் திசைவழியில் தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறது.இதனை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லவே... ஆம்! சோசலிச சமுதாயத்தை படைக்கவே... ஏகாதிபத்திய சக்திகளுக்கு சாவு மணியடிக்கவே.. என்றென்றும் போர்பரணி பாடி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி! அத்தகைய பயணத்தின் ஊடேதான் பதினாறாவது பொதுத்தேர்தல் பவனி வருகிறது.பாரத நாட்டை பன்னாட்டு திமிங்கலங்களுக்கு தீனியாக்கிவிட்டு... ராகுல்காந்தியோ “ஏழை இந்தியா, பணக்கார இந்தியா” என இரண்டு இந்தியா உள்ளதென பசப்புகிறார்.
அண்ணல் காந்தியைக் காவு கொண்ட நாதுராம் கோட்சேவின் வாரிசு நரேந்திர மோடியோ “ஊழல், வளர்ச்சி” என மகுடி ஊதுகிறார்! பன்னாட்டு சுரண்டல் என்கிற ஒரே குட்டையில் ஊறித் திளைக்கும் காங்கிரஸ் - பிஜேபி என்கிற இரு மட்டைகளையும் மண்ணைக் கவ்வச் செய்வோம்! மாற்று இடதுசாரி - ஜனநாயக - சமத்துவக் கொள்கைகளை மக்கள் மனதில் விதைப்போம்! என சேலம் சிறைத்தியாகிகள் நினைவு நாளில் சபதமேற்போம்!தியாகிகளே! நீங்கள் வீழ்ந்த மரங்கள் அல்ல; நீங்கள் வீரிய விதைகள்! உங்களில் இருந்து நாங்கள் ஆயிரமாயிரமாய் எழுவோம்! சேலம் சிறைத்தியாகிகளே உங்களுக்கு எங்கள் வீரவணக்கம்.

No comments:

Post a Comment