Wednesday, February 12, 2014

அரசியல் மேடையில் அரங்கேறும் நாடகங்கள்!
உ.வாசுகி

கொல்கத்தாவில் அண்மையில் உரை யாற்றிய மோடி, மூன்றாவது அணி என்பது மூன்றாம் தரமானது என்று பேசியிருக்கிறார். அடுத்து, கொச்சியில் நடந்த கூட்டத்தில், கேரளாவில் பிஜேபி மூன்றாவது மாற்றாக உருவெடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார். பிஜேபிக்கும் மாற்றாக ஓர் அணி உருவானால், அது மூன்றாம் தரம், பிஜேபியே மூன்றாவது அணியானால் அது முதல் தரமா? கொல் கத்தாவில் அப்படிப் பேசினீர்களே, கொச்சி யில் இப்படிப் பேசுகிறீர்களே என்று கேட்டால், வடிவேலு போல, அது போன வாரம், இது இந்த வாரம் என்று பதில் பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
காங்கிரஸ், பிஜேபி அல்லாத இதர மதச்சார்பற்ற கட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணுகிக் கொண்டிருக்கிறது. கடந்த அக்டோ பர் மாதம் 30ம் தேதி, டெல்லியில் 14 கட்சிகள் கலந்து கொண்ட மதவெறி எதிர்ப்பு மாநாடு நடந்தது. இம்மாதம் 5ம் தேதி, 11 கட்சிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் எஞ்சிய ஒன்று, ஒன்றரை மாதங்களைக் கூட விட்டு வைக்காமல் காங்கிரஸ் கொண்டு வர விரும்பும் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்வது பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் காக்கத் தேவைப்படும் ஒருங்கிணைப்பு பிரதான நிகழ்ச்சி நிரலாக அமைந்திருக்கிறது. அடுத்து, தேவகௌடா வீட்டில் ஒரு சந்திப்பு நிகழ இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கட்சிகளைத் தான் மோடி மூன்றாம் தரம் என்று பேசியுள்ளார். ஒரு வேளை இக்கட்சிகளில் ஏதாவது ஒன்று பிஜேபி பக்கம் வருவ தாக இருந்தால், வேண்டாம், நீங்கள் மூன்றாம் தரம் என்று மோடி சொல்லி அக்கட்சியை நிரா கரித்து விடுவாரா? அல்லது மூன்றாம் தரமாக இருந்த அந்தக் கட்சி, பிஜேபியுடன் சேர்ந்த உடன் ரின் சோப்பு போட்டு வெளுக்கப் பட்டு முதல் தரமாகி விடுமா?மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, மோடியின் இப்பேச்சு தான் மூன்றாம் தரம் என்று வர்ணித்திருக்கிறார். பொது செயலாளர் பிரகாஷ் காரத் அவர்களோ, நாங்கள் மூன்றாம் வகுப்புக்கு வந்து விட்டோம், மோடியோ இன்னும் முதல் வகுப்பிலேயே இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
அமைச்சர் சிதம்பரம் அவர்களை மறு வாக்கு எண்ணிக்கை சிதம்பரம் என்று மோடி பேச, மோடிக்கு இருக்கும் பொருளாதார அறிவை ஒரு தபால் தலை பின்னால் எழுதிவிடலாம், அவ்வளவு குறைவானது என்று சிதம்பரம் பேச, ஹார்ட் ஒர்க் இருந்தால் போதும், ஹார்வர்டு படிப்பு தேவையில்லை என்று மோடி பதில் சொல்ல, 16வது நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நடக்கும் அரசியல் விவாதம் தான் மூன்றாம் தரமாக இருக்கிறது. மக்கள் உண்மையான பிரச்சனைகளை சிந்தித்து விடக் கூடாது என்று காங்கிரஸ், பிஜேபி இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு திசை திருப்புகிறார்கள்.
உண்மை ‘மறந்த’ மோடி
இந்தியா சீனா யுத்தத்தின் போது, இந்திய ராணுவ வீரர்களின் சேவையைப் புகழ்ந்து லதா மங்கேஷ்கர் பாடிய பாடலின் 51வது ஆண்டு நிறைவை ஒட்டி, மும்பையில் ஜனவரி 27ம் தேதி ராணுவத்தினர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பேசிய போது, மோடி, நம் நாட்டில் ராணுவ வீரர்களுக்காக ஒரு நினைவு சின்னம்கூட இல்லை என்று விமர்சனம் செய்திருக்கிறார். டெல்லியில் உள்ள இந்தியா கேட் என்பதே போர் வீரர்களின் நினைவு சின்னம் தான். தில்லி, சென்னை, டார்ஜிலிங், புனே, சண்டிகர், டேராடூன், ஜம்மு உட்பட 15 இடங்களில் நினைவு சின் னம் உள்ளது.
ராணுவ வீரர்களுக்கே அல்வா கொடுத்தால் எப்படி?அதேபோல், இந்தியா பாகிஸ்தான் எல்லையின் ஒரு பகுதி குஜராத் எல்லையுடன் இணைந்து வருகிறது. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு குஜராத்தில் மோடி பேசிய முதல் பேச்சில், எல்லைப்பகுதிக்கு நான் நேரடியாகச் சென்று பார்த்தேன். எல் லையைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்குக் குடிநீர் கிடைப்பதே கடினமாக உள்ளது. ஒட் டகங்கள் மூலம் தான் தண்ணீர் அனுப்பப்படு கிறது. இதற்காக 800 ஒட்டகங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. ராணுவத்தினரின் வலியை நான் உணர்ந்தேன். அதற்காக, நர்மதை நதியின் தூய்மையான நீர் அவர்களுக்குச் சேர வேண் டும் என்று நினைத்து, குஜராத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதி வரை 700 கிமீ தொலைவுக்குக் குழாய் பதிக் கும் பணியில் ஈடுபட்டேன். இப்போது அவர் களுக்குச் சுத்தமான குடிநீர் செல்லுகிறது என்று கூறியுள்ளார்.
உண்மை என்ன? மோடி, 2001 அக்டோபர் 7ம் தேதி தான் குஜராத் முதல்வரா கிறார். 1999ல் துவங்கிய சர்தார் சரோவர் திட்டத்தின் கீழ் இந்தக் குழாய்பதிக்கும் வேலை, 2001 ஜனவரியில் முற்று பெற்று, மோடிக்கு முந்தைய முதல்வர் கேஷுபாய் பட்டேலால் துவக்கியும் வைக்கப்பட்டுவிட்டது. இதற்கும் மோடிக்கும் சம்பந்தமே இல்லை. எங்கு சம்பந்தம் வருகிறது என்று சொன்னால், முடிவுற்ற பைப் லைனை இன்னொரு 100 கிமீ எடுத்துச் சென்று எல்லை யில் இருப்பவர்களுக்குக் குடிநீர் வழங்கும் பணி பாக்கி இருந்ததை மோடி முடித்தார். எப்போது? நூ....று கிமீ லைனை 2013ல் தான் முடித்து வைத்தார். 700 கிமீ 2,3 வருடங்களில் முடிந்து விட்டது. வெறும் 100 கிலோ மீட்டரை 12 ஆண்டுகள் இவர் இழுத்தடித்து விட்டு மொத்தத்துக்கும் சேர்த்து பேர் வாங்க ஆசைப் பட்டால் என்ன சொல்வது? இதற்குத் தானா ஆசைப்பட்டீர் நரேந்திர மோடி?
இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா?
காங்கிரஸ் மட்டும் சளைத்ததா என்ன? ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க, மானிய விலை சிலிண்டர் 9 இலிருந்து 12 ஆக உயர்த்தப் படுகிறது என்று செய்திகள் வெளியாயின. ராகுல் காந்தி யார்? செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தாரா? சிலிண்டர் எண்ணிக்கை 6ஆகக் குறைக்கப்பட்ட போது எங்கே போயி ருந்தார்? காங்கிரஸ் தலைமையிலான ஒருகூட்டணி அரசு முடிவு எடுக்கும் போது, அது குறித்து காங்கிரசின் அகில இந்திய துணைத் தலைவருக்கே தெரியாதா? சிலிண்டர் எண்ணிக்கையை அதிகரித்தது அவர்கேட்டுக் கொண்ட அடிப்படையில் என் றால், குறைத்ததும் அவரைக் கேட்டுத் தானே?மக்கள் விரோத முடிவுக்கு உம் கொட்டுவாராம். பிறகு மக்கள் ‘நலன்’ காக்க அதை மாற்றச்சொல்லுவாராம்.
கேழ்வரகில் நெய் வடி கிறது, நம்புங்கள் என்கிறது காங்கிரஸ். நாடுமுழுதும் மக்களின் கோபமும்,மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின்போராட்டமும், குறிப்பாகக் கேரளாவில்மட்டும்1400 இடங்களில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவங்கி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத் தியதும் தான் இந்த முடிவுக்கு அடித்தளமாக இருந்திருக்கிறது.ஏழை மக்களிடம், பணம் என்ன மரத்திலா காய்க்கிறது என்று கடிந்து கொண்டு, அதே சமயம் வருடத்துக்கு சராசரியாக ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு, பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வாரி வழங்கும் மன்மோகன்சிங்கையும், காங்கிரசையும் விட நரேந்திர மோடியை ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்குகின்றன என்றால் என்ன அர்த்தம்? காங்கிரசை விட தீவிரமாகப் பெருமுதலாளிகளுக்கு மோடி வாரி வழங்கு வார் என்ற எதிர்பார்ப்பு தானே? வேறு என்னகாரணம் இருக்க முடியும்? கார்ப்பரேட்டு களின் நலனைவிட மக்களின் நலனை மதிப்பவர்களை ஊடகங்கள் முன்னுக்கு வர விட்டுவிடுமா? அவர்களை நல்லவர்கள் என்று சித்தரிக்குமா? காங்கிரசுக்கு பிஜேபிமாற்று என்பது யாருக்கு? கார்ப்பரேட்டு களுக்குத் தான். மக்களுக்கு அல்ல.கொஞ்ச நஞ்சம் மோடி குறித்து விமர்சிக்கும் தொலைக்காட்சி விவாதப் பொறுப் பாளர்களையும் அந்தந்த நிர்வாகம் ‘சரி’ செய்ய முயற்சித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
அவர்களுக்கு மோடி ஆதரவாளர்களிடமிருந்து வரக்கூடிய, கொன்று விடுவோம், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கு வோம், வேலையிலிருந்து தூக்கி விடுவோம் போன்ற மிரட்டல்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. கருத்து சுதந்திரமும், பேச்சுசுதந்திரமும் என்ன கதி ஆகிக் கொண்டிருக் கிறது என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பதவி குறித்து கனவு காணும் போதே இந்தக் கொடுமையா? பதவி கிடைத்துவிட்டால் பாசிஸ போக்குகள் தலைவிரித்து ஆடாதா?மோடி அலை அடித்துத் தள்ளுகிறது என்றால், தமிழகத்தில் பிஜேபி ஏன் வலை போட்டு மீன் பிடித்துக் கொண்டிருக்கிறது? அலை இருக்கும் போது வலை எதற்கு? “கொசுகடிக்கிறது. ஏனெனில் அதற்கு ரத்தம் வேண்டி யிருக்கிறது.
ஆனால் இந்த லூசு எறும்பு ஏன் கடிக்கிறது?” என்று இணைய தளத்தில் ஒரு ஜோக் உலா வந்து கொண்டிருக்கிறது. இது சிலருக்கு மதிமுக குறித்த நினைவுகளை எழுப்பினால் நாம் பொறுப்பல்ல! இந்தப் பின்னணியில் தான், மாற்று நபர்களை அல்ல, மாற்று ஆட்சியை மட்டும்அல்ல, மாற்றுக் கொள்கைகள் குறித்து யோசிக்குமாறு, விவாதிக்குமாறு மக்களைமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியும், இடது சாரிகளும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரசும் பிஜேபியும் இந்தியாவைப் பிடித்த இரு பெரும் தொற்று நோய்கள். இந்தத் தொற்றுகள் விலக்கப்பட்டால்தான், தேசத்தின் ஆரோக்கியம் மீட்கப்படும்.

No comments:

Post a Comment