Wednesday, May 21, 2014

தோழர் ஆர். உமாநாத் தனிச்சிறப்புமிக்க கம்யூனிஸ்ட்
பிரகாஷ் காரத்

தோழர் ஆர்.உமாநாத் தனது 93வது வயதில் திருச்சியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். மார்க்சிய, லெனினிய கோட்பாட்டை முழு அர்ப்பணிப்புடன் ஆழ்ந்து பயின்று ஒரு கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் எவ்வாறு தொழிலாளர் வர்க்க இயக்கத்தை கட்டி வளர்ப்பவராக பரிணமிக்க முடியும் என்பதற்கு தோழர் உமாநாத் ஒரு தனித்துவம் மிக்க உதாரணமாகும்.ஆலைத் தொழிலாளர்களை ஒன்றுபடுத்துபவராக தன்னுடைய அரசியல் வாழ்வைத் துவக்கிய ஆர்.உமாநாத். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த முன்னணித் தலைமுறையைச் சேர்ந்தவர். அவருடைய 70 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை என்பது உழைக்கும் வர்க்க இயக்கத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஒன்றாக இருந்தது.
மார்க்சிய லெனினியத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையின்பாற்பட்டது அவருடைய இயக்க வாழ்க்கை. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை ராஜதானியின் கீழிருந்த காசர்கோட்டில் கொங்கணி மொழி பேசும் குடும்பம் ஒன்றில் ஆர்.உமாநாத் பிறந்தார். கோழிக்கோட்டில் அவர் பள்ளிப்படிப்பு பயின்றுகொண்டிருந்த போது விடுதலைப்போராட்ட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அதன்பின் இடதுசாரி இயக்கத்தால் நடத்தப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் அவரை ஈர்த்தது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உயர்படிப்புக்காகச் சென்ற அவர் அந்த வளாகத்தில் இயங்கி வந்த கம்யூனிஸ்ட் குழுவில் இணைந்தார். 1939ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி ரகசியமாக இயங்கிவந்தபோது அவர் தனது கல்வியைத் துறந்து கட்சியின் உறுப்பினரானார். இந்த முடிவுதான் இளம் மாணவராக இருந்த அவரை போர்க்குணம் மிக்க புரட்சிகர போராளியாக மாற்றியது.
அன்றைய கம்யூனிஸ்டுகளைப் போன்று ஆர்.உமாநாத்தும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக்காலத்தில் அவர் தலைமறைவாகவும் வெளிப்படையாகவும் கட்சிப்பணிகளில் ஈடுபட்டார். கோயம்புத்தூரில் ஆலைத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றிய அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 1948ம் ஆண்டு அவர் கோவை சிறையிலிருந்து தப்பினார். திருச்சியில் செயல்பட்ட ரயில்வே தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களில் அவர் இணைந்து பணியாற்றினார். 1950களில் தமிழகத்தில் வலிமைமிக்க தொழிற்சங்கத் தலைவராக ஆர்.உமாநாத் உருவானார்.
தோழர் ஆர்.உமாநாத் கிளர்ச்சியூட்டக்கூடிய வகையில் உரையாற்றும் வல்லமைமிக்க மிகச்சிறந்த பேச்சாளர். தனித்துவமிக்க மூத்த தலைவரான தோழர் பி.ராமமூர்த்தி போன்று தோழர் ஆர்.உமாநாத்தும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுச்சிமிக்க பேச்சாளராக உருவானார். நான் கட்சியில் சேர்ந்த காலத்தில் தோழர் உமாநாத் கட்சிப் பொதுக்கூட்டங்களிலும் தொழிற்சங்கக் கூட்டங்களிலும் ஆற்றிய உரைகள் என்னிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. 1962 மற்றும் 1967ம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் குழுவின் சார்பாக ஆற்றல்மிக்க தலையீடுகளை நிகழ்த்தினார்.
1977 மற்றும் 1980ல் தமிழக சட்டப்பேரவைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தைப் போன்றே சட்டமன்றத்திலும் அவருடைய செயல்பாடு மிகச்சிறப்பாக அமைந்தது. ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்றவாதி எவ்வாறு செயல்படவேண்டும் என்பதற்கு உதாரணமாக அவர் திகழ்ந்தார். கட்சி மையத்தில் இணைந்து பணியாற்றிய அவர், 1995ம் ஆண்டு சண்டிகரில் நடைபெற்ற 15வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டார். தொழிலாளர் வர்க்க போராட்டங்களில் ஈடுபட்டு செறிவான அனுபவத்தைப் பெற்றிருந்த அவர், மார்க்சிய அணுகுமுறையை பயன்படுத்தி கம்யூனிஸ்ட் கட்சியை கட்டி வளர்த்ததில் வல்லவராக திகழ்ந்தார். அவர், தொழிலாளர் வர்க்க இயக்கத்தை கட்டி வளர்க்கும் தலைவராகவும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தின் திறம்பட செயலாற்றும் தலைவராகவும் விளங்கினார்.
அவருடைய இந்த அனுபவம் கட்சியின் அகில இந்திய மையத்தில் ஸ்தாபன மற்றும் அரசியல் பணிகளை நிறைவேற்றுவதில் பெரும் உதவியாக அமைந்தது.கட்சித்திட்டத்தை மேம்படுத்தும் பணியின்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக்குழுவில் நடைபெற்ற உள்கட்சி விவாதத்தில் அவருடைய பங்களிப்பு மகத்தானதாக அமைந்திருந்தது. 2000ம் ஆண்டில் கட்சித்திட்டம் மேம்படுத்தப்பட்டபோது அவருடைய மார்க்சிய ஞானம் பல்வேறு அணுகுமுறைகளை உருவாக்குவதற்கு பேருதவியாக அமைந்தது. உள்கட்சி விவாதங்களின்போது தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாகவும் அனுபவ அறிவோடும் வெளிப்படுத்துபவராக அவர் அறியப்பட்டிருந்தார். தனக்கு தவறென்று படும் விஷயங்களில் அவர் தன்னுடைய விமர்சனத்தை பகிரங்கமாக முன்வைப்பார்.
இந்த விமர்சனத்தால் யார் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்து அவர் கவலைப்படமாட்டார். அதேநேரத்தில் ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாட்டிற்கு உட்பட்டு செயல்பட்ட அவர் இத்தகைய விஷயங்களை கட்சி அமைப்புகளுக்கு வெளியில் ஒருபோதும் பேசமாட்டார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மையத்தில் அவரோடு இணைந்து பணியாற்றும் நல்வாய்ப்பு எனக்குக்கிட்டியது. அனைத்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும் மத்தியக்குழு உறுப்பினர்களும் பல்வேறு அரசியல் நிலைபாடுகளில் அவர் முன்வைக்கும் கருத்துக்களை கவனமாக எடுத்துக்கொள்வார்கள். பல்வேறு சர்வதேச தேசிய அரசியல் நிகழ்வுகளில் உறுதியான வர்க்க நிலைப்பாட்டின் அடிப்படையில் அவர் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
தோழர் உமாநாத் சொந்த அபிலாஷைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தலைவர். தன்னுடைய கடைசிக் காலம் வரையிலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை கட்சியிடம் முழுமையாக கொடுத்துவிட்டு கட்சி கொடுத்த ஊதியத்திலேயே வாழ்க்கையை நடத்தியவர். அவரும் அவரது துணைவியார் பாப்பா உமாநாத்தும் கட்சிக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு எண்ணற்ற தியாகங்களை செய்தவர்கள். கட்சியின் முழுநேர ஊழியர்களாக செயல்பட்ட இருவரும் தங்களது இல்வாழ்க்கையை அதற்கேற்பவே அமைத்துக்கொண்டனர். தங்களது மகள்களையும் அரசியல் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக வளர்த்துள்ளனர்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்ற செய்தி கிடைத்தவுடன் மே 15ம் தேதி திருச்சிக்குச் சென்று அவரை நான் சந்தித்தேன். அப்போது சுய நினைவுடன் அவர் இருந்தார். “உங்களைச் சந்திப்பதற்காகவே நான் திருச்சிக்கு வந்துள்ளேன்“ என்று அவரிடம் கூறியபோது புன்னகைத்த அவர், “ஆபத்தில் உதவுபவன்தான் அருமை நண்பன்“ என்ற பழமொழியை கூற நினைத்து “ஆபத்தில் உதவும் நண்பன்“ என்பதை மட்டும் கூறினார். நமது நேசமிக்க தோழரை இழந்து ஆழ்ந்த துயர் கொள்கிறோம். அதே நேரத்தில் தன்னிகரற்ற கம்யூனிஸ்ட்டாக திகழ்ந்த அவர் கட்சிக்கும், தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கும் அளித்துள்ள மகத்தான பங்களிப்பை நினைவு கூர்கிறோம்.

No comments:

Post a Comment