Wednesday, May 21, 2014

தொழிலாளர்களுக்காக சிம்ம கர்ஜனை செய்தவர்
சிஐடியு தமிழ் மாநிலக்குழு புகழஞ்சலி!


தோழர் வி.பி.சிந்தனுடன் ஆர்.உமாநாத் (கோப்பு படம்)/ தோழர் ஆர்.உமாநாத் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட அனைத்து சங்கங்களும் செங்கொடி தாழ்த்திமூன்றுநாள் துக்கம் கடைப்பிடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:சிஐடியுவின் முதுபெரும் தலைவர் ஆர். உமாநாத் அவர்களின் மறைவிற்கு சிஐடியு தமிழ் மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.உமாநாத் என்ற உன்னதத் தலைவரின் பாதை, பயணம் ஒரு மகத்தான மனிதரின் ஜீவ சரித்திரம் ஆகும். நாட்டை ஆண்ட பண்டித நேரு, ராஜாஜி, காமராஜ், அண்ணா போன்ற தலைவர்களுக்கெல்லாம் தோழர் உமாநாத் நன்கு அறிமுகமானவர். கல்லூரி படிப்பின் போது சுப்ரமணிய சர்மா, பி.கிருஷ்ணப் பிள்ளை போன்ற தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. வர்க்கப் போராட்டத்தை ஆலை யில், தெருவில், நடத்துவது எப்படி? சட்ட மன்றத்தில், நாடாளுமன்றத்தில், நீதிமன்றத் தில், சிறைச் சாலையில் நடத்துவது எப்படி? இவை அனைத்திலும் உமாநாத் சுடர்விட்டு பிரகாசித்தார்.தோழர் உமாநாத் இந்திய நாடாளுமன்றத் திலும், சட்டமன்றத்திலும் உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக சிம்ம கர்ஜனை செய்த வர். பல தொழிலாளர் நலச் சட்டங்கள் உருவாவதற்கு இவரது போராட்டம் உதவியது. ஆலை பிரச்சனை முதல் உலக பிரச்சனை வரை பொதுமக்களுக்கு புரியும் வகையில் பேசி புரிய வைப்பதில் இவர் நிகரற்றவர்.
சக போராளியாக
உமாநாத் வாழ்க்கையில் தோழர் பாப்பா உமாநாத்தின் பங்கு மகத்தானது. மனைவியாக, நல்ல தோழராக, சகபோராளியாக வாழ்ந் தவர். 1970ம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற ஸ்தாபன மாநாட்டில் அகில இந்திய நிர்வாகி யாகவும், முதல் மாநாட்டிலிருந்து மாநில பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 1993ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் திறம்பட செயல்பட்டார்.உமாநாத் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பெரும் வெற்றிகளை ஈட்டியவையாகும். இரண்டு வாரம், மூன்று வாரம், நான்கு வாரம் என்று அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். உயிர்போகும் நிலைவரினும் கோரிக்கைகள் நிறைவேறாமல் அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றதே இல்லை.புதுக்கோட்டை கணபதி மில், நமன சமுத் திரம், புகளுர், டால்மியா சிமெண்ட் ஆலையில் அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்கள் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதுடன் பெரும் வெற்றியும் பெற்றன.புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை குத்தகை விவசாயிகளுக்கு பெற்று தந்ததில் தோழர் உமாநாத் பங்கு மகத்தானது.
சிரமங்களுக்கு மத்தியிலும்...
ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்களின் சட்ட சலுகை களையும், உரிமைகளையும் பெறுவதற்கு தோழர் பி.ராமமூர்த்தி மற்றும் கே.ரமணி இவர்களோடு இணைந்து வழிகாட்டி, வெற்றி கரமான வேலை நிறுத்தங்களை நடத்தி காட்டியவர் தோழர் உமாநாத்.தொழிலாளர்களை திரட்டிட சென்ற உமாநாத்துக்கோ எல்லாமே சவால். பணம் கிடையாது. முழுநேர ஊழியர் சம்பளம் என்பது கிட்டதட்ட கிடையாது. படுக்கப் பாய் கூட பிரச்சனை தான். சாப்பாட்டு சிரமம் கேட்கவே வேண்டாம். கிட்டத்தட்ட அரைப்பட்டினி. இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் தொழிற்சங்கப் பணி வேகமாக நடந்தேறியது.
கடும் அடக்குமுறைகளை சந்தித்தவர்
சங்கம் உருவாவதை விரும்பாத முத லாளிகளும் - சுயநலமி சங்கங்களும் ரவுடிகளை ஏவி தாக்குதல் தொடுப்பது சர்வ சாதா ரண நிகழ்ச்சிகளாகிவிட்டன. போலீசாரும் முதலாளிகளுக்கும், ரவுடிகளுக்கும், துணை நின்றனர். தொழிலாளர்களின் பிரச்சனைகளை, உணர்வுகளை, புரிந்து கொள்வது என்பது மிக சிரமம். அதற்கு அவர்களோடு பேச வேண்டும், மனம் திறந்து பேச வேண்டும். உமாநாத்திற்கோ ஆங்கிலமும், மலையாளமும் தெரியும். தமிழில் சரளமாக பேச வராது. தமிழ் தெரியாமல் உழைப்பாளிகளிடம் பணியாற்ற இயலாது. எனவே சுயகல்வி மூலமும், தொழிலாளர்கள் துணையுடனும் தமிழ் கற்க துவங்கினார். தோழர் கே.ரமணி விடுதலை ஆன பின் அவருடன் பங்கேற்ற ஆலைவாயிற் கூட்டங்களும், ஊழியர் கூட்டங்களும் உமாநாத்திற்கு தமிழ் பயிற்சி அளித்தன.செங்கொடி இயக்கத்தின் கடுமையான முயற்சியின் பயனாக கோவை நகரம், பாப்ப நாயக்கன் பாளையம், லட்சுமி மில், திருப்பூர் நகர மில்களில் செங்கொடி இயக்கம் வலுவாக வேரூன்றியது. இத்தொழிலாளர்களை வென் றெடுக்கும் பணியில் உமாநாத் தனியாளாக அல்ல: ஒரு படையாக செயல்பட்டார். முன்அனுபவம் ஏதுமற்ற உமாநாத் சுயமாக தொழி லாளர் பிரச்சனை, உணர்வுகள் இவற்றைக் கற்று ஊழியர்களை திரட்டி தொழிற்சங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது பெரும் சாதனை!
காவேரி மில் போராட்டம்
புதுக்கோட்டை காவேரி மில்லில் கடும் வேலைப்பளுவால் உழைப்பாளிகள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தனர். முதுகெலும்பு முறியும் வேலைப்பளுவால் நொந்து போயிருந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நிர்வாகம் கத வடைப்பு செய்தது. தொழிலாளர்கள் வெளியேற மறுத்தனர். அவர்களை வெளியேற்ற போலீஸ் ஆலைக்குள் நுழைந்தது. மோதல் உக்கிரமானது. தடியடி பலரின் மண்டையை பிளந்தது. கதவடைப்பை எதிர்த்து தொழிலாளி - விவசாயி சகோதர ஆதரவு திரட்ட உமாநாத் பம்பரமாக சுழன்றார். தினசரி ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதைத்தொடர்ந்து அணிதிரட்டப்படாத பீடித் தொழிலாளர் மத்தியில் பணியாற்ற அவர் களை போராட்டக் களத்திற்கு கொண்டு வந்தது உமாநாத்தின் செயல்திறனுக்கு மெருகூட்டியது.
பண முதலைகளை எதிர்த்து வெற்றி
1962ல் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தலில் உமாநாத்தை வேட்பாளராக கட்சி நிறுத்தியது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபல பஞ்சாலை முதலாளி நின்றார். 30,000 வாக்கு வித்தியாசத்தில் உமாநாத் வெற்றிபெற்றார். 1967ல் பிரபல தோல் ஆலை முதலாளி நாகப்ப செட்டியாரை காங்கிரஸ் நிறுத்தியது. இருப்பினும் மீண்டும் உமாநாத் வெற்றி பெற்றார். 1977-80 பின்னர் 80-84 என இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் உமாநாத் தேந்தெடுக்கப்பட்டார்.திருச்சியில் தோழர் உமாநாத் பங்கேற்று வழிநடத்திய போராட்டங்கள் எண்ணி லடங்கா! ஒவ்வொன்றும் ஒருபாடம் சொல்லும். ஒவ்வொன்றும் ஒரு காவியமாகும். 1990ம் ஆண்டு கருணாநிதி முதல்வர். ஊர் வலம் போகக்கூடாது, உண்ணாவிரதம் இருக்கக்கூடாது, ஆள் அரவமே இல்லாத சுடுகாடுகள் பக்கம் தான் போராட்ட ஆர்ப் பாட்டங்களெல்லாம் என்று வம்பு செய்தது போலீஸ். இதை மீறுவது என்பது சிஐடியு முடிவு. அண்ணாசாலையில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க சிஐடியு முடிவு. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக ஆதரவு அளித்தது.
செங்கொடி தாழ்த்தி அஞ்சலி
இத்தகைய நெடும்வரலாற்றுக்கு சொந்தமான தோழர் ஆர். உமாநாத் அவர்களின் மறைவு தமிழக தொழிலாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல இந்திய உழைப்பாளி வர்க்கத்துக்கு பேரழிப்பாகும்.அன்னாரை பிரிந்து வாடும் மகள்கள் உ.வாசுகி, உ.நிர்மலாராணி உள்ளிட்ட குடும்பத் தினர் அனைவருக்கும் சிஐடியு தமிழ் மாநிலக் குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment