நிஸ்ஸிம் மன்னத்துக்காரன்
குடியரசு எனும் தனது நூலில், குகை குறித்த புகழ்மிகு உருவகத்தை நமக்குத் தருகிறார் பிளேட்டோ. வாழ்நாள் முழுதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு குகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் கைதிகள்; தமக்கு முன்னே உள்ள சுவரில் தோன்றும் நிழல் களைத் தவிர வேறு எதனையும் அவர்களால் காணஇயலாத நிலை. நிழலை மட்டுமே காணமுடியு மென்பதால், அதனையே நிஜம் என்று நம்பி விடுகிறார்கள். அவர்களில் ஒரு கைதி, தளை யை அறுத்துக் கொண்டு குகையிலிருந்து வெளியேறும்போதுதான் அவனால் நிஜத்தைக் கண்டுணரமுடிகிறது. இந்தியாவின் பிரதமர் என்ற நிலையை நரேந்திர மோடி எட்டியுள்ள அதே சமயம், இந்திய அரசியலும்கூட மாயா பிம்பம் எனும்சொல்லின் நேர் பொருளாகவும், உருவகமாகவும் மாயா பிம்ப யுகத்திற்குள் அடியெடுத்து வைத் திருக்கிறது.
இதனை நிழல்களின் யுகம் என்று கூட அழைக்கலாம். ஏனெனில், மோடிஒரு சாதனையாக, 437 பொதுக் கூட்டங் களில் பேசியது மட்டுமல்லாமல், பல சந்தர்ப்பங் களில் ஒரே நேரத்தில் 1350 முப்பரிமாணக் கூட்டங்களில் மாயா பிம்பமாகவும் தோன்றியிருக் கிறார். ரத்தமும் சதையையும் கொண்டு ஏறத் தாழ நிஜ உருவம் போன்றே தோன்றுகின்ற மோடியின் இந்தப் புதிய அவதாரம், மெய் எது - பொய்எது; நிஜம் எது - நிழல் எது எனப் பிரித்துணர் வதில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய அரசியல் போக்கில் ஆபத்து என்னவென்றால், அதன் உள்ளடக்கம் பெருமளவு சூன்யமாக்கப்பட்டுவிடுகிறது; சமுதா யத்தை எதிர்நோக்கியுள்ள ஆழமான பிரச் சனைகள் குறித்து மக்களிடம் நேருக்கு நேர்மெய்யாகவே ஜனநாயகப்பூர்வமாக விவாதிப்பது என்னும் அரசியல் நடைமுறை புறந்தள் ளப்பட்டுவிடுகிறது;
அதற்கு மாறாக, அதிகார நரம்புமண்டல மையங்களில் இயங்குகிற படப்பிடிப்புக் கூடங்களால் ஒளிபரப்பப் படும் காட்சிகள் மூலம் முப்பரிமாண மாயாபிம்ப அரசியலும், தேவதூதர் பாணி அரசியலும் பஞ்சைகள், பராரிகள் வாழுகின்ற இந்த பரந்துவிரிந்த நாட்டின் பின்புலத்தி லுள்ள தெருமுனைகள் மற்றும் கிராமச்சாவடி களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.மோடியின் பெயரைப் பரப்புகின்ற தொலைக்காட்சி அதிரடி விளம்பரங்கள், ‘கூகுள் ப்ளஸ் ஹாங் அவுட்’ இணையதள நிகழ்ச்சிகள், கைபேசி மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள், குரல் செய்திகள், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கெல்லாம் செல்லத் தக்க, இடம் சுட்டும் சாதனமான ‘ஜி.பி.எஸ்.’ மூலம் இயக்கப்படுகின்ற 650 பிரச்சார ரதங்கள் அல்லது கடந்த ஐந்து மாதங்களில் மட்டுமே அனுப்பப்பட்ட ஒரு கோடியே பத்து லட்சம் ‘ட்வீட்’ செய்திகள் ஆகியவை இல் லாமல் முப்பரிமாண பிம்ப அரசியலையும், தொலைபேசி வர்த்தக அரசியலையும் நடத்த முடி யாது. 116 நாடுகளைச் சேர்ந்த 82,000 பேர்ஒரு இணையதள ‘ஹாங் அவுட்’ நிகழ்ச் சியைக் காண நேர்ந்ததால், கூகுள் சேவை யகம் செயல் இழக்க நேரிட்டதாகத் தெரி கிறது.
பழையபாணி அரசியல் என்பதே நுனிப்புல்மேய்வதாக இருக்குமெனில், மாயாபிம்ப அரசியலானது, இந்த ஆழமற்ற தன்மையை விண்முட்டும் அளவுக்குக் கொண்டு செல்கிறது. இந்த வகையில்தான், தேநீர் பருகிக் கொண்டே நிகழ்த்தும் விவாதம் என்பது, எதிரணி அரசியல்வாதியொருவரின் தடம் புரண்ட சொல்லுக்குப் பதிலடியாக, தீர்க்க சிந்தனையின்றி உருவாக்கப்பட்டதுதானே தவிர, தேநீர் விருந்து விவாதத்தின் மூலமாக அரசியலை ஜனநாயகமயமாக்கல் என்கிற தூரதிருஷ்டியுடன் கூடிய உள்ளார்ந்த ஈடுபாட் டின் விளைவாக உருவானதல்ல. நொடிப் பொழுதில் சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிற உலகில் அல்லது சமூகவியலாளர் சிக்மண்ட் பாவ்மனின் வார்த்தைகளில் சொல் வதானால், ‘ஸ்திரமற்ற நவீனத்துவ’ (liquid modernity) உலகில், மனித உறவுகளின் கெட்டியான பிணைப்புகள், அவை குடும்பம், நட்பு,கூட்டு அரசியல் திட்டங்கள் என எதை எடுத்துக் கொண்டாலும், கலகலத்து விழுந்துவிடு கின்றன அல்லது நொடிப் பொழுதில் தோன்றிமறைகின்ற, ஸ்திரமற்ற நிலையை நோக்கி அவை கரையத் தொடங்குகின்றன; அங்கேஅனைத்தும் ஷணநேரத்தில் உருகிப் போய்விடு கின்றன, எல்லாம் நிலையற்று, உறுதியற்றதாக மாறிப்போகின்றன.
இதில் வேடிக்கை என்ன வென்றால், இடம்பெயரத்தக்க, உறுதியற்ற தன்மையைத் தாமே பெற்று விடுவதனாலும், (இவ்வாறாகத்தானே, உலகளாவிய நிதி மற்றும் ஊக மூலதனம் எல்லைக் கோடு களையெல்லாம் கடந்து, புவிக்கோளின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைந்து, அதன் விளை வாகப் படு நாசத்தை உண்டாக்கி விடுகின்றது), தம்மை எதிர்க்கின்ற சக்திகள் சிதறி சின்னா பின்னமாய்க் கிடப்பதைப் பயன்படுத்திக் கொண்டும் ஒரு சில கரங்களில் குவியத் தொடங்குகிற அரசியலும் மூலதனமும் தம்மைக் கெட்டிப்படுத்திக் கொள்வதற்கு இதுவே மிகச் சரியான சூழலாகும். இங்கே அரசியல் மற்றும் இதர நெறிமுறைகளின் ஆயுள், ‘ட்வீட்’ செய்திகள், முகநூல் தகவல்கள் மற்றும் கைபேசிக் குறுஞ்செய்திகள் ஆகி யவை போன்று அற்பாயுசாகச் சுருங்கிப் போய் விடுகின்றது.இத்தகு சூழலில், அரசியல் நெறிமுறைகள் குறித்து விளக்கமளிக்கும்போது, அது அறிவுக்கு ஒவ்வாத வடிவங்களை எடுக்கக் கூடும்; பாசிச முறைகளைக் கைக்கொள்ள நேரும்ஜனநாயக யுகத்தில் பாசிசம் என்பது விஷ வாயுக் கூடங்களைக் கொண்டிருக்காது.
இப்படிப்பட்ட அமைப்பின்கீழ், விலக்கி வைப்பதும், வாயடைப்பு செய்வதும் வன்முறையின் மூலமாக அல்லாமல், மிகுந்த ‘ஜனநாயக வழியில்’ நிறைவேற்றப்படும்; (எடுத்துக் காட்டாக, சக்திமிக்க ஊடகங்களின் பெரும்பகுதியினர் சத்தியம், நீதி ஆகியவற்றின்பால் தமது உள் ளார்ந்த ஈடுபாட்டை உதறித் தள்ளிவிட்டு, இதற்கு மாறாக, தேர்தல் ‘அலைகளை’ உருவாக்கும் காரியத்தில் விரும்பி வேண்டி பங்கு கொள்வார்கள்).நிலையற்ற, சிதறிப் போய்க்கிடக்கிற இந்த நிலையில், தனியொருமனிதனாக நின்று ‘ஸ்திரத்தன்மையை’, ‘ஆட்சி நிர்வாகத்தை’, (நமது காலத்தின் தாரகமந்திரமாகிவிட்ட) ‘வளர்ச்சி’யைத் தருகின்ற, இவற்றுடன் போதை தலைக்கேறிய பெரும்பான்மை தேசியவாதத்தை இணைக்கவல்ல எதேச்சதி காரி ஒருவரை அன்றி வேறு யார் இந்த பரந்துவிரிந்த, வேறுபாடுகளைக் கொண்ட சமுதாயத் தை ஆளமுடியும்? தேர்தல் தீர்ப்பில் பத்தோடுஒன்று பதினொன்றாக இருக்கும் உள்ளூர் எம்.பி. யைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?பாசிஸ்ட் அணி திரட்டலுக்குத் துணை போவதாகவும், வெறும் ஆறுமாதகாலப் பிரச்சாரத்தின் போதே ஆறுலட்சம் கிராமங் களின் கதியை மாற்றத் தக்கதாகவும் இருப்பதோடல்லாமல், மாயாபிம்பங்கள் அந்தரத்தில் தொங்கும் ஆவிகளாக இன்றி, அவற்றை உருவாக்கு வதற்கான நிஜமான காரணிகளும் இருப்பதால், மாயாபிம்ப அரசியலானது அபாயகரமானதாகிறது. தேர்தலில் ‘மக்கள்’ தீர்ப்பளித்துள்ள (‘இந்தியா என்றால் மோடி; மோடி என்றால்இந்தியா என்கிறது ஒரு நாளேடு) இந்நிலையில், 5000 கோடி ரூபாய் (இது, அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்காக ஓராண் டுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஐந்தில்ஒருபகுதி) பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செலவழிக்கப் பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறதே, இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்பதே ஜனநாயக விரோதமான, முறை யற்ற காரியமாகத் தோன்றும் போலும்! தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் எம்.பி.க்களில் முஸ்லிம்களே இல்லை என் கிற அதிர்ச்சிக்குரிய விஷயத்தைப் பற்றிப் பேசுவதும் கூட இதற்கு இணையான ஜனநாயகவிரோத காரியமாகக் கருதப்படக் கூடும்.
இங்கேதான், பாசிஸ்ட் அரசியல், மன ஒப்புத லுடன் அரங்கேறிவிடுகிறது. இவையெல்லாம் இருந்தபோதிலும், சில தீவிர கருத்தோட்டம் கொண்ட விமர்சகர்கள் செய்வதைப் போன்று, மோடியின் தேர்தல் வெற்றியை, ‘இந்தியக் குடியரசில் இதுவரை கிடைத்த தேர்தல் தீர்ப்புகளில் மக்களின் ஆதரவு இல்லாதது, வாக்காளர்களின் ஆதர வைப் பிரதிபலிக்காதது’ என்றோ அல்லது `ஜனநாயக வரலாற்றில் பெருமளவில் களவடாப்பட்ட தேர்தல்’ என்றோ அல்லது வரலாற்றில் கார்ப்பரேட்டுகள் அடித்த பெருங் கொள்ளை’ என்றோ தூற்றி, மாயாபிம்ப அர சியலை நாம் தடுத்து நிறுத்திவிடமுடியாது. பதிவான வாக்குகளில் 31 சதவீதம் மட்டுமே (மொத்த வாக்காளர்களில் 21 சதவீதத்தினர் மட்டுமே) பா.ஜ.க.வுக்கு வாக்களித்து, இந்தியாவில் தனிக்கட்சிகள் பெரும்பான்மை பெற்றதில் மிகக்குறைந்த வாக்குகளுடன் பெரும்பான்மை பெற்ற கட்சியாக அதனை ஆக்கி யிருக்கிறார்கள் என்பது உண்மைதான்.
மாநிலக்கட்சிகளின் வாக்கு விகிதமோ, இடங் களின் எண்ணிக்கையோ அப்படியே மாறாமல் இருக்க, சிதறுண்ட தீர்ப்பினை மக்கள் அளித்துள்ளதால், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை கொண்டு வரப்படவேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்துள்ளதும் உண்மைதான். கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் சரித்திரம் காணாத, கூச்சநாச்சமற்ற ஆதரவு இல்லாமல் ‘மோடி அலை’ என்பது சாத்தியமாகியிருக்காது என்பதும் உண்மைதான். இருப்பினும், இத்தேர்தல் வெற்றியை இதுபோல் அணுகிக்காண்பது மேலோட்ட மான பார்வையாகிவிடும். அவ்வாறு செய்வதன்மூலம், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த 31 சதவீதம் மக்களையும், அசாம், மேற்கு வங்கம்,ஒடிசா, அருணாசலப் பிரதேசம், ஜம்மு -காஷ்மீர் மாநிலங்களில் பா.ஜ.க.வின் வாக்குவிகிதம் மிகக் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந் திருப்பதையும் முக்கியத்துவமற்றதென உதாசீனப்படுத்துவதாகிவிடும். மோடிக்கு வாக் களித்தவர்களின் எண்ணிக்கையை மட்டும் பார்ப்பதன்மூலம், மற்ற கட்சிகளுக்கு வாக் களித்தபோதிலும் அல்லது வாக்களிக்காமலே இருந்தபோதிலும் அவரது பாணி அரசியலுக்கு மௌனமாக அங்கீகாரம் அளித்தவர்களின் எண்ணிக்கையை அலட்சியம் செய்வ தாகிவிடும்; மாயாபிம்பங்களால் கவர்ந் திழுக்கப்படுவதற்குத் தயாராக மதில்மேல் பூனைகளாக அமர்ந்திருப்பவர்களின் எண் ணிக்கையை அலட்சியம் செய்வதாகிவிடும்; இதுவரை பா.ஜ.க. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. எவரையும் ஒருபோதும் தேர்ந்தெடுக்காத, ஆனால் நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களைக் கொண் டுள்ள கேரளா போன்ற மாநிலங்களை அலட்சி யம் செய்வதாகிவிடும்; உலகில் உள்ள அரசி யல் பிரமுகர்களில் மோடியின் முகநூல் பக்கம்தான் படுவேகமாகப் பிரபலமாகிக் கொண் டிருக்கிறது என்கிற விஷயத்தையும் அலட்சியப்படுத்திவிடுவதாகும்.
பாஜகவுக்கு 69 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதில் மன ஆறுதல் தேடுவதன்மூலம் மாயாபிம்ப அரசியலுக்கு இரையாகிவிடுகின்றனர் தீவிரகருத்துள்ள பிரிவினர். அரசியலில் மாறியுள்ள சூழலை அவர்கள் பார்க்க மறுக்கின்றனர்: எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளும்கூட இந்த நிலையை எட்டிப்பிடிக்கவும், தமக்குச் சொந்தமான மாயாபிம்பங்களை உருவாக்கிடவும் தற்போது நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. இதனால் தான், ஓர் அரசியல் இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதற்குத் தேவையான குருதியும், வியர்வையும், கண்ணீரும் சிந்துவதற்குத் தயாராக இல்லாத ஆம் ஆத்மி கட்சி, 432 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, அதன்மூலம் ‘உடனடி அரசியலில்’ இறங்கிப் பணியாற்றவே விரும்புகிறது. பிரச்சாரத்துக்காகச் செலவழிக்கப்பட்ட 5000 கோடி ரூபாய் விஷயத்தை அம்பலப் படுத்துவதோடு நின்றுவிட்டால் போதாது; மக்களைப் பகடைக் காய்களாக எண்ணி உதாசீனப்படுத்திவிடாமல், மோடிக்கு மக்கள் ஏன்வாக்களித்தனர்; அவர்களின் கற்பனைகள் என்ன; கனவுகள் என்ன; அவரிடம் அவர்கள்புகலிடம் தேடக் காரணம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஆழ்ந்தறிவது அவசியம்.
பெருமளவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஆதிவாசிகள், தலித்துகளில் சில பகுதியினர் மோடியின்பால் கவர்ந்திழுக் கப்பட்டதன் ரகசியத்தையும் கண்டறிவது அவசியமாகும். அவ்வாறு செய்யாதபட்சத்தில், மக்களை அன்பளிப்புக் காகிதத்தில் வைத்துச்சுற்றி மாயாபிம்ப அரசியலுக்குத் தாரைவார்த்துத் தருவதாகிவிடும்.பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் ஜனசமூகம் என சமுதாய தளங்கள் எங்கி லும் ஜனநாயகமயமாக்கலுக்கான உயிர்த்துடிப் புள்ள போராட்டங்களை உருவாக்கி வளர்ப் பதற்கு மாறாக, இந்திய ஜனநாயகமானது, பெருமளவுக்குத் தேர்தல் நடவடிக்கைகள் என்பதாக மட்டும் சுருங்கிப்போனது மாபெரும் துயர மாகும். இதன் விளைவாக, உதாரணத்துக்குச் சொல்வதானால், சுதந்திரம்பெற்று அறுபது ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும், பரந்து பட்ட மக்கள் பகுதியினர் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாமல் மிக மோசமான வறுமையில் வாடும் நிலையில், வளர்ச்சி என்கிற உயர்த் திச்சொல்லப்படும் பதமே, வாழ்வா-சாவாஎன்பதற்கான போராட்டத்தைக் குறிப்பதாகி விடுகிறது.இவ்வாறு, ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் தமதுகடமைகளைச் செய்யத் தவறியதன் விளைவாக, பாசிஸ்ட் பாணி அரசியலுக்கு அடித்தளம் அமைத்துவிட்டார்கள். தேர்தல்கள் மூல மாக மட்டும் பாசிசத்தை எதிர்க்கும்போது, அது வெட்ட வெட்ட வளர்கின்ற தலையைக் கொண்ட அரக்கன்போலாகிறது.
புத்ரில்லார் கூறுவதைப்போன்று, செயற்கையான முறை யில் மெய்போன்ற சூழலை உருவாக்குகின்ற வெகுஜன ஊடகங்களின் யுகத்தில், ‘அதிக,மேலதிகமான செய்திகள்-குறைந்த, ஆகக்குறைந்த உண்மை’ எனும் நிலைதான்இருக்கும். ஆனால், அதை மாற்றிப் போடுவதற்கான தருணம் வந்துவிட்டது. மாயாபிம்பங்களின் உண்மைப் பொருளைக் கண்டறியும் கடமைப் பொறுப்பு நம் தோள்களில்! அரசியலை மீண்டும் எதார்த்தநிலைக்குக் கொண்டுவரும் கடமையும்நமக்குண்டு. நம்மை நாமே விடுவித்துக் கொண்டு, குகையிலிருந்து வெளியேறி, நிழல் களுக்கு அப்பால் இருக்கும் நிஜத்தைக் காண வேண்டிய பொறுப்பு நம் கரங்களில்தானே தவிர, எந்த தேவதூதன் கையிலும் இல்லை!
நன்றி : தி இந்து ஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை (ஜூன் 6)தமிழில்: எஸ்.துரைராஜ்
No comments:
Post a Comment